அதிகாலை இதுவென்று
விடிவெள்ளி
சொன்ன பின்பும்
சேவல் விழித்து
சோம்பல் முறித்து
காலை விடிந்ததென்று
கூவிய பின்பும்
கோபுரத் திசையிருந்து
கோயில் மணி ஒலித்து
கும்பிட வாருங்கள்
ஏன்றழைத்த பின்பும்
சூரியன் எழுந்து
இருளைச் சலவை செய்ய
வானம் வெளுத்த பின்பும்
புல்லில் தூங்கிய
பனிக்கூட்டமெல்லாம்
மண்ணுக்குள் நுழைந்து
வேரோடுறவாடச்
சென்ற பின்பும்
மொட்டுக்கள் மலர்ந்து
வண்ணங்கள் தெளித்து
விடிகாலைப் பொழுதொன்றை
வரவேற்ற பின்பும்
அதிகாலைத் தென்றல் வந்து
காலை வணக்கம்
சொல்லி என்னை
ஆரத்தழுவிய பின்பும்
எனக்கு ஏனோ விடியவில்லை
ஏனெனில்
என் தாவணிப் பூ
இன்னும் பூக்கவில்லை
என் கண்களில்
என் காதல் தெய்வம்
இன்னும் எனக்கு
தரிசனம் தரவில்லை
ஆதலால் எனக்கு
இன்னும் விடியவில்லை
.