அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா

வண்ணமயில் ஏறிவரும்
வடிவேலனுக்கு
அரோகரா

முருகா!
என்னப்பா இது?

இனம் மொழி தாண்டி
உன்ர வாசலிலை நிறையுது
பக்தர்கள் வெள்ளம்

கடையில விக்கிற
பிள்ளையார் சிலையில
மேடின் சைனா இருக்கு

கடைக்குட்டிக்கு வாங்கிற
அம்மம்மா குழலை
வடக்கத்தையான் விற்கிறான்

ஐப்பான் காரன்
வந்து
“சோ” றூம் போடுறான்

பாகிஸ்தான் காரன் வந்து
பாய் வி(ரி)க்கிறான்

கண்ணுக்கு தெரியிற
இடமெல்லாம்
துரோகிகள் கூட்டம்

கண்கட்டி
வித்தை காட்டுது
சிங்கள தேசம்

வெள்ளை வேட்டி கட்டி
சுது மாத்தையாக்கள்

வெறும் மேலோட
களு பண்டாக்கள்

போதாக்குறைக்கு

விமானச் சீட்டுக்கு
விலைக்குறைப்பு

ஊரடங்குச்சட்டத்துக்கு
நேரக்குறைப்பு

ஏ ஒன்பது
பாதை திறப்பு…

இப்படி நீளுது
திருவிளையாடல்

எங்களுக்கு மட்டும்
ஓர வஞ்சனை

முன்னூறாயிரம் பேருக்கு
முள்ளுக்கம்பிச் சிறை

பலபேருக்கு
இலங்கை வரத்தடை

ஏனெனில்
நாங்கள் கேட்டது
அலங்காரச் சுதந்திரமல்ல
ஆனந்த சுதந்திரம்

உனக்கென்னப்பா
நூறு குடத்தில அபிசேகம்

மண் போட்டால்
மண் விழாத
மக்கள் கூட்டம்

வண்ண மயில் ஏறி
வள்ளி தெய்வயானையோடு
வடிவழகு வருகை வாழ்வு

கந்தா
கடம்பா
கதிர்வேலா

உன்ர வீதியில இருந்துதான்
எங்கள ஏமாத்த நினைச்சவங்களை
கண்டு பிடிச்சனாங்கள்

உன்ரை வீதியிலை
பசித்திருந்துதான்
ஒரு பிள்ளை
வடக்கத்தையான்
முகத்திரை கிழிச்சவன்

எங்கட மக்கள் மறந்தாலும்
நீயாவது மறக்காமல்
இரப்பா

உனக்காச்சும்
ஒரு சமயத்தில
கோவணம் மிச்சம்

இப்ப கொட்டாவி விடுற
எங்கட சனத்துக்கு?

எல்லாருக்கும் நல்லவரம்
நல்கும்
தமிழ்க்கடவுளே
முருகா
எனக்கும் ஒரு வரம்
தந்துவிடு

திருந்த நினைக்காத
சனத்தை திருத்தவும் வேண்டாம்

முள்ளுக்கம்பி
வளவுக்குள்ள
வருந்திற எங்கடை சனத்துக்கு
வாழ்வளிக்கவும் வேண்டாம்

இனக்கொலை புரிந்த
தென்னிலங்கைக்கு
தண்டனையும் வேண்டாம்

வஞ்சகத்தோடை வளவுக்குள்ள
வாறவங்களை
கண்டு பிடிக்கவும் வேண்டாம்

உனக்கு கொஞ்சம் பக்கத்தில
காக்கா பீச்சினபடி
நிற்கிற சங்கிலியன்
சிலை

மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற
மாவீரன் பண்டாரவன்னியன்
கல்லறை

முன்னர் கண்டியை
ஆண்ட
விக்கிரம ராஜசிங்கன்

ஆழக்கடலாண்ட
சோழ மகாராஜன்

தமிழர் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகிற
விடுதலைப் பெருநெருப்பு
பிரபாகரன்

இப்பிடி
மண்ணிலை முளைச்சிருக்கிற
வரலாறை
உன்ர பக்தர்களுக்கு
நினைவிருத்து
அதுபோதும்

வரலாறு விட்ட வழியில்
காலம் இட்ட கட்டளைப்படி
சிங்கள அந்நிய ஆதிக்கம்
அகன்ற நாள் வர

நாங்களும்
ஒரு நாள்
உன் வாசல் வருவோம்

அதுவரை

அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா

வண்ணமயில் ஏறிவிளையாடும்
வடிவேலனுக்கு
அரோகரா




நில்லுங்கள்
மனிதர்களே!

வண்ணங்கள் கொண்டு
எங்கள் வாழ்க்கையை
வனைய வேண்டாம்

நிறையப் புனைகதை புனைந்து
எங்களுக்கு
அனுதாபம் தேடித்தரவும்
வேண்டாம்

நாங்கள் தொலைத்ததில்
கொஞ்சத்தையும்
சுமப்பதில்
கொஞ்சத்தையும்
அங்கங்கே
எழுத்துப்பிழைகளோடாவது
எழுதினால் போதும்

நாங்கள்
மீண்டும் உயிர்பெறுவோம்.


நம்புங்கள்
மனிதர்களே!

முள்ளுக்கம்பிகளுக்குள்
முளைத்து நிற்பவை
எங்கள் கனவுகளின்
சமாதிகளே

மீட்பின் பெயரால்
நடந்துகொண்டிருப்பது
அழிப்பின்
அதி உச்சமே

இங்கு
வசந்தம் என்பது
வாடகைக்கு கூட இல்லை

மறுவாழ்வு என்பது
மருந்துக்கும் இல்லை.

ஒரு இரவுக்கும்
பகலுக்கும்
இடையில்
பல வருடங்களை தின்றபடிதான்
எங்கள் காலச்சக்கரம்
சுழல்கின்றது

பல வார்த்தைகளை
தின்றுவிட்டுத்தான்
சில வார்த்தைகள்
பேசுகின்றோம்

இங்கே
குயில்கள் கூவுவதில்லை
காதில்
கேட்பதெல்லாம்
முகாரி ராகங்களே

கால்களுக்கு காப்புறுதி
உயிர்கள் என்பதால்
எந்த மயிலும்
நடனம் ஆட நினைப்பதில்லை

தாயொரு கூடாரத்தில்
அதன் சேயொரு கூடாரத்தில்
நடுவில்
ஏழு வரியில்
முள்ளுக்கம்பிகளும்
அதைச்சுற்றி “மல்லி”த் தம்பிகளுமாய்
எங்கள் வாழ்வு
எங்கோ தொலைந்து கரைகிறது

எந்தப்பகலிலும்
இருளே நிறைந்து
வழிகிறது

ஒரு குடம்
தண்ணிக்கு நாலு நாள்
வரிசையில் நிற்போம்

வெறும் கஞ்சிக்கு கையேந்தி
இன்னும் எத்தனை நாள்
எங்கள்
ஜீவனை வளர்ப்போம்?

உறவைச் சந்திக்கும்
நேரத்தில்
தள்ளி நின்று அழுவோம்

சந்திக்க உறவே இல்லாதோர்
தனியிருந்தும் அழுவோம்

கொஞ்சம் சிந்திக்கும் நேரத்தில்
சிறகொடிந்து துடிப்போம்

ஆயினும்
பறக்கவே துடிக்கின்றோம்
சுதந்திரமாய்

கந்தகம் கலந்த போதும்
சுதந்திரம் சுமந்த காற்றை
எப்போது தொலைத்தோமோ
அப்போதே
செத்துப்போனோம்

ஆயினும்
இப்போதும் உயிர்வாழ்கின்றோம்
மறுவாழ்வு வேண்டி

மறுவாழ்வு
என்பது
மீண்டும் கந்தகம் கலந்தாலும்
சுதந்திரம்
சுமந்த காற்றை
சுவாசித்தலே

ஆறாத
எங்கள் காயத்திற்கு
அருமருந்து
அந்த சாலைகளின் ஓரங்களில்
காலாற நடத்தலே




அள்ளி அணைத்து
உறவெல்லாம் ஆரத்தழுவும்

மெல்ல மலர்ந்து ஒரு
முல்லை சிரிக்கும்

சின்னக் குழந்தையாய்
அதன் உள்ளம் இருக்கும்

நல்ல தமிழாய் அதன்
வார்த்தை இனிக்கும்

வண்ணக் கனவுகள்
நின்று நிறைக்கும்

வார்த்தைக்கு வார்த்தை
அண்ணனை கதைக்கும்

அப்போது இன்னும் சில
நிமிடமே இருக்கும்

இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும்
அப்போதும் அந்த முகம் சிரிக்கும்

சின்னக் கை அசைத்து
விடை பெறும்

ஒரு வண்ணம்
ஓவியமாய்
உயிர்பெறும்

நல்ல காவியமாய்
தேசப்புயல் கடக்கும்

ஆம்

ஒரு கரும்புலி
கந்தகம் சுமந்து
நடக்கும்

பெரும் பகை மோதி
வெடி வெடிக்கும்

ஒரு உன்னத மனிதன் உயிர் விட
ஒரே உன்னத இலட்சியம் துளிர்விடும்
உயிர்ப்புற்று உறுதிபெறும்

மெல்ல வரும் காற்று
எங்கள் மேனி தொடும்

சொல்ல வார்த்தையின்றி
அது தன்னாலே தடவி அழும்

அலையும் கடலும்
கரை வந்து கரையும்

நாமும்
மெல்ல விழி கசிவோம்
நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்

மீண்டும் சின்னக்குழந்தைகளாய்
சிரிப்போம்

ஏனெனில்
நாங்கள் கரும்புலிகள்
எங்கள் தலைமுறைக்காக
எங்களை அர்ப்பணித்தவர்கள்

இலட்சியம் ஈடேறும் வரை
நாங்கள் சாவதில்லை
சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம்
சத்தியம்
தமிழீழம் காண்போம்.



புல்லோடும் புயலோடும்
கல்லோடும் கடலோடும்
பேச முடிந்த
கவிஞர்களே!

என்ன திடீர் மௌனம்
உங்களுக்குள்ளே?

புயலுக்கு முந்தியதா?
பிந்தியதா?
என
உங்கள் மௌனங்களுக்கு
உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?

நல்ல கதை.
புயல்களை
புதிது புதிதாய்
பிறப்பிப்பதே
நீங்கள்தானே.

நீங்களே தூங்கினால்
நாளைய பொழுதுகளின்
நம்பிக்கையை
யார் கொடுப்பது?

நீண்ட இரவுகளின்
இராச்சியத்திற்கு
உங்கள் இமைகளை
அனுமதிக்காதீர்

கசியும் உங்கள்
கண்களைத் துடையுங்கள்

கடலலை மோதும்
ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்

முள்ளிவாய்க்காலில்
சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை
சாட்சியுடன் எழுதுங்கள்

காற்றில் தவழும்
அத்தனை அலைகளுடனும்
உரையாடுங்கள்

கஞ்சிக்கு உயிர் விலை
கொடுத்ததையும்

காற்றே களவாடப்பட்டு
கந்தகமும் பொசுபரசும்
பரிசளிக்கப்பட்டதையும்

மருந்துக்கு
மண் அள்ளிப் போட்டதையும்

பெற்றதாய் மார்பில்
செத்தபின் பால்குடித்த
துயரத்தையும்

என
எங்கள் துயரத்தை
எங்கள் நியாயத்தை
எங்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளை

நீதிக்கு இழைக்கப்பட்ட
அநீதியை

மொத்தமாய்
பதிவுசெய்யுங்கள்

இலக்கு
தெளிவாய் தெரியும்
விடுதலைப்பயணத்தில்
இருள் என்று ஒன்று இல்லை.
இருப்பின்
அதன் பெயர்
குறைந்த வெளிச்சம்
என்று
உங்கள் கவிதைகள்
தீக்குச்சி கிழிக்கட்டும்

கேளுங்கள் தரப்படும்
தரப்படாவிட்டால்
தரும்வரை கேளுங்கள்

தட்டுங்கள் திறக்கப்படும்
திறக்கப்படாவிட்டால்
திறக்கும் வரை தட்டுங்கள்

என்று
மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்
உங்கள் கவிதைகள்

கவிஞர்களே!
தயவு செய்து
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்

செத்த கவிஞர்கள்
கடமையையும்
நீங்கள் தான் செய்யவேண்டும்

பிறக்க இருந்து
இறந்த கவிஞர்களையும்
நீங்கள் தான்
உருவாக்க வேண்டும்

அவர்கள்
எழுத நினைத்தவற்றையும்
நீங்கள் தான்
எழுதவேண்டும்

அவர்கள்
தொடக்கிவைத்தவற்றையும்
நீங்கள்தான்
முடிக்கவேண்டும்

புறப்படுங்கள்
தூரங்களும்
இதயங்களும்
சுருங்கிப்போன உலகில்
உங்கள் கவிதைகள்
காவியங்களாய் ஊடுருவட்டும்

புயல்களை எதிர்பார்க்க
பூகம்பங்களை எதிர்கொள்ள
ஓவ்வொரு தமிழனுக்கும்
கற்றுக் கொடுங்கள்

அதோ
தொலைவில்..

“போர் இன்னும் ஓயவில்லை
எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”

ஒரு கவிஞன் உடைத்த
மௌனம் பேசுகிறது

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”

இன்னொரு கவிஞனின்
நம்பிக்கை பேசுகிறது.

எங்கே
நீங்களும்
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்

உடைக்கும் போது
மறக்கவேண்டாம்
நம்பிக்கையையும்
விடுதலை வேட்கையையும்
விதைப்பதற்கு

அன்பானவர்களே!
உங்கள் பேனாக்கள்
துளித்துளியாய்
கரையட்டும்

வார்த்தைகள்
தீப் பொறியாய் வீழட்டும்

அதுவே
தமிழர் மனங்களில்
உலகின் திசைகளில்
ஈழ விடுதலைப் பெருந்தீயை
அணையாது எரிக்கட்டும்.




கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக் காதலி.
09.02.2009



“வணக்கம்”

அங்கிருந்தொருவன்
அருகிருப்பதுபோல் பேசுவான்

தொலை தூர வாழ்வில்
அதிகாலைப்பொழுதில்
தினந்தோறும் வருவான்.
தாய்நாட்டு வாசனை
தன் குரலாலே தெளிப்பான்.

முன்னைய நாட்களில்..
தனித்தேசக் கனவை
தன்மான உணர்வை
செயல் திறன் ஆற்றலை
எங்களுக்குள்
இன்னும் அதிகமாக்கியவன்

இறுதி நாட்களில்..
முள்ளி வாய்க்கால்
இப்போது என்ன சொல்லுதென்று
வரி விடாமல் சொல்லுவான்

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி
நிமிர்ந்து வந்து
குரல் தருவான்.

எங்களைப்போல்
முகம் தெரியா நண்பர்கள்
அவனுக்கு அதிகம்.
அத்தனை பேரும்
தேடுகின்றோம் அவனை.

இப்போது
நீண்ட நாட்களாய்
காணவில்லை.
அவனை?
அவன் குரலை?

இன்று..
அருகிருப்பவன்
சொன்னான்
அவன் வீர மரணமென்று

படம் கிடைத்தது.
முதன் முதலாய்
முகம் பார்த்தோம்.

முகத்தோடு முகம் புதைத்து
அழுதோம்
இனம் புரியா உணர்வால்
தவித்தோம்

அவன் செய்தி படித்தோம்
“அழுகை நிறுத்துங்கள்”
அதில் ஒன்று.

“எழுந்து நடவுங்கள்”
இன்னொன்று.

விழுப்புண்ணாய் இருக்கையிலே
வெளி வேலை செய்வாயாம்
ஆறிய மறுகணமே
களம் நோக்கி
நடப்பாயாம்.
புல்லரித்துப்போகின்றோம்

உன்னைத் தொட்டபடி
நடந்தது வரம்.
தொலைத்துவிட்டுத்
தவிப்பது சாபம்.

நாங்கள் பதில் போடவும்
எங்கள் முகம் காணவும்
நீயில்லை
எங்கள் முகந்தெரியாத நண்பனே!

இப்போது
புடம் போடுகின்றோம்,
நீ சொன்னதுபோல்
விடுதலைக்காய்
எங்களை...!



சூரியத் தீயை
நீர் கொண்டு அணையுங்கள்

வானைச் சுருக்கி
கைகளில் அடக்குங்கள்

புயலைப் பிடித்து
சிறையில் அடையுங்கள்

கடலை அள்ளி
நிலவில் நிறையுங்கள்

சுட்டு விரலில் வைத்து
பூமியைச் சுற்றுங்கள்

இத்தனையும் முடித்த பின்
தமிழனிடம் வாருங்கள்

அவன் விடுதலை நெருப்பை
அணைக்க முயலுங்கள்

அப்போதும் தோற்கும்
உங்களின் அடக்குமுறை

விடுதலை நெருப்பில்
விரல் வைத்து வெந்தவர்களே!

எங்களின் தேசத்தில்
முகமூடி போட்டு
முகம் வைத்தவர்களே!
கேளுங்கள்..

மாவீரர் தேசம்
எதையும் இழக்கும்.
மானத்திற்காக..

மானத் தமிழர்
தங்களையே துறப்பர்.
ஈழத்திற்காக..

காலமும்
களங்களும்
உங்களுக்குப்
பதில் சொல்லும்.

தமிழும்
ஈழமும்
நிச்சயம் வெல்லும்.


போதி மர நிழலிலெல்லாம்
பீரங்கிகள்

இப்போது
புத்தமதத் தத்தவமே
யுத்தம் ஒன்று தான்

செத்து வீழும் பிஞ்சு கூட
யுத்தம் செய்யும் புலியாம்

இதற்கு
வல்லரசுகள் வழங்கிவரும்
“சற்றலைற்று” சாட்சியாம்

கோல மயில் அழகான குல வாழ்வு
பாதி உயிரோடு
வீதி வழி நடக்கிறது.

எமன் ஏவி விடும் கணையாலே
மீதி உயிர்போக
உடல்
தெருவோரம் சிதறிக் கிடக்கிறது.

ஒவ்வொரு தமிழன் திண்ணையிலும்
மரணம் வாழை இலை போட்டு
விருந்து வைக்கிறது.

அதை நன்றாய் சுவைக்கிறது
நவீன உலகம்.
அதில் முழுதாய் தொலைகிறது
மனித நேயம்


தமிழா!
அவர்களின் முடிவு இதுவென்றால்
எங்களின் ஆரம்பம்
இதுவாய் இருக்கட்டும்

எட்டுத்திக்கும் எழுந்து நடப்போம்
மனக்கதவுகள் தினம் தட்டுவோம்.

செத்துவிழும் தமிழரெல்லாம்
பீனிக்ஸ் பறவையாய்
இருப்போம்

மிச்சமுள்ள தமிழரெல்லாம்
உச்சம் தொடும் உணர்வுகள்
சுமப்போம்

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லாத் தமிழா!

அச்சமில்லை
அச்சமில்லை
உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
அர்ப்பணிக்கும் தமிழனுக்கு
என்றுமே அச்சமில்லை.

இலட்சிய வீரன் எப்படித் தோற்பான்?
சத்திய வேள்வி எப்படி அணையும்?

மழைக்காலம் ஆனாலும்
மந்திகளே கொப்பிழக்கப் பாய்வதில்லை.
போர்க்குணத்துப் புலிகளுக்கு
இந்தச் சவால் புதிதில்லை.


மானமது பெரிதென்ற
மண்டியிடா வாழ்வெமது.

போகும் உயிர் போனாலும்
புறம் காட்டி ஓடமாட்டோம்

வரிவேங்கைச் சேனை நாங்கள்
ஒரு போதும் வீழமாட்டோம்.

நம்புங்கள்
புலிகள் நகங்களை நறுக்குவதில்லை.
தமிழீழம்
துப்பாக்கிகளை வைத்து பூப்பறிப்பதில்லை.
நாளை
புலிகள் பாயும்.
பிறக்கும்
பொழுதுகள் நமதாக
வரலாறு நிமிரும்.

செய்வதை செய்யுங்கள்
கொடுப்பதை கொடுங்கள்

கொண்டுபோய் கொட்டுவதை கொட்டட்டும்
எங்கள் நிலம் எதையும் சுமக்கும்
எமை எதிர்ப்போர் எவரையும் எதிர்க்கும்
அங்கிருந்துதான் எங்கள் வரலாறு நிமிரும்
அதை நாளை வரலாறு எழுதும்

தமிழா!
நினைவிருக்கட்டும்
தமிழீழம்
ஓர் இனத்தின் விடுதலை மட்டுமல்ல
ஓர் உலகின் விடுதலை
தொடர்ந்து போராடு.





முத்துக்குமார்!
நீ எரிந்த சேதி கேட்டு
நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே.
உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள்
உயிர் சுமக்குதே.

விதியே விதியே
என்செய் நினைத்திட்டாய்
என் தமிழ்ச்சாதியை….

பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது
உருகி நின்றவா
நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய்
நிறைத்து வைத்தவா

எரிமலையின் குழம்பு தான்
உன் உடலில் ஓடியது.
விடுதலையின் தீயில்
பெரும் தமிழா வேகினாய்

உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம்
அழகுப் பொய்யடா – தம்பி
உண்மை சொன்ன உந்தன் மொழியில்
தமிழன் வலியடா

மனிதம் பேசும் வாய்கள்
எல்லாம் மனிதர் இல்லையே
மனிதம் செத்த உலகால் தானே
தினமும் தொல்லையே

சுற்றிச் சுற்றி வருவதெல்லாம்
சோகச் செய்தியே
இரண்டு கண்கள் அழுவதற்கு
போதவில்லையே

எழுக தமிழா சொன்னபோதும் - சில
தமிழன் எழும்பவில்லையே
நீ எரிந்த பின்பும் தூங்கும் தமிழன்
மனிதன் இல்லையே

சின்னச் சின்ன செய்தி கேட்டு
சிலிர்த்துக் கொள்ளும் நாம் - நீ
எரிந்து சொன்ன பின்பு ஏனோ
குமுறி வெடிக்கிறோம்

இறந்த காலக் காயம்
நாளை ஆறும் நண்பனே – உந்தன்
மரணம் தொட்ட கனவு
நிஜமாகும் தமிழனே!








கிளிநொச்சி..!
நேற்று..

கன உலகச் சீமான்கள்
வந்து வந்து
கைகொடுத்த இடம்.

கூட்டை மறந்து விட்டு
குருவிகள் கும்மி அடிக்குமென்று
பல பொய் மனிதர்கள்
வானம் கிழித்து வந்திறங்கி
நன்றாய் வானம் விட்ட இடம்.

யப்பான் மாமாக்கள் வந்து
நண்டுக் கறியோடு நன்றாய்
நா நனைத்த இடம்.

அமெரிக்கர் கூட வந்து
அலகை அசைத்த இடம்.

நோர்வே அண்ணாக்கள்
வந்தமர்ந்து வந்தமர்ந்து
பல கதிரைகள்
குப்பையில போன இடம்.

வந்தவரையெல்லாம் வரவேற்று
நாங்கள்
கனகாம்பிகைக் குள விடுதியிலை
தங்கவைக்க
எல்லாரும் நல்லாத் தூங்கி
கனவு கண்டுவிட்டு
நாசமாக்க நினைத்த இடம்.

பல நாட்டு அனுபவமும்
ஏமாற்றும் தந்திரமும்
ஒரு சிறு இனத்திடம்
அதன்
தனித் தலைவனிடம்
தோற்றுப் போன இடம்.


கிளிநொச்சி..!
இப்போது..

தென்றல் தினமும்
கந்தகம் சுமந்து
நடக்குமிடம்.

வானம் எப்போதும்
குண்டுகள் அள்ளி
இறைக்குமிடம்.

இருக்கும் ஒரு கணத்திற்கும்
ஏதாவது வெடிக்குமிடம்

ஒரு பூவரசே
பல கதைகள் சொல்லுமிடம்

வாகை மரத்தடிகளில்
வரலாற்றின் பக்கங்கள்
விரியும் இடம்

எங்கள்
சூரியன்கள் நிமிர்ந்து
நெருப்பை பொழியுமிடம்.

களத்தில் தினந்தோறும்
சிங்களம் சிதையுமிடம்.

போர் மேகம்
உலகை தூங்கும் படி
நடிக்கப் பணித்த இடம்.

அமெரிக்கா
ஜப்பான்
பிரித்தானியா
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
மாலைதீவு
அண்டை நாடு இந்தியா என
போர் நிபுணர்கள் வந்துபோகும்
புதுக் களம்.

மொத்தப் பிரபஞ்சமும்
எம் முன்னே திரண்டாலும்
தமிழ் மக்கள் சக்தி கொண்டு
போரிடும் நாங்கள் வெல்ல
அத்தனை பேரும்
தோற்கப் போகும் களம்.

இரணைமடு மாரியில கட்டாயம்
வான் பாயும்.
எங்கள் வயல்கள்
எப்போதும்
எதையாவது விதைக்கும்.
பகை அழிக்கப் பாடுபடும்.

சின்னப் பூவும்
எங்கள் வண்ணக் கனவு சுமந்து
தினமும் உழைக்கும்.

தமிழன்
சொந்தச் சிறகுகளில்
உயரப் பறக்கும் இனம்.

செங்குருதி எங்கள் வண்ணம்
சுடு குழல் எங்கள் தூரிகை
தமிழ் ஈழம்
அது
நாங்கள் வரையும் ஓவியம்

நேற்று நூறு
நேற்று முன்னாள் இன்னொரு
இரு நூறு
கணக்கு ஆரம்பமாகி
பாடம் நடக்கிறது.

‘வந்தவனை நாங்கள் விடோம்’
என்று
வன்னி மண் சிலிர்க்கிறது.

இன்னுமொரு வியட்னாமாய்
எம் மக்கள் களத்தில்

போர்த்திரை கிழித்து
புலி நகர
நாளை புலரும்
சில தினங்கள் போதும்.


கிளிநொச்சி!
போலிச் சமாதானத்தின்
முகத்திரை கிழித்த இடம்

இன அழிப்புப் போரிற்கும்
முடிவுகட்ட
அது தான் சரியான இடம்


நலிந்த பொழுதுகளின் நம்பிக்கைகளே!
உடைந்து உடைந்து
உறுதி பெற்ற நெஞ்சங்களே!

இதோ உங்கள் பொழுதுகள்
நெஞ்சு நிமிர்த்தி நடவுங்கள்
தேசப் பணியை தொடருங்கள்

இரவல் ஒளிகொள்ளும் நிலவல்ல நாங்கள்
சொந்த ஒளிகொள்ளும் சூரியன்கள்.

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net