ஏய்!
முணு முணுக்கும் வாய்களே!
கொஞ்சம் நிறுத்துங்கள்.

படலைக்கு உள்ளே
தெருநாய் வருவதால்
உன் முற்றம் தொலையுதென்று
எவன் சொன்னான்?

தெருக்கள் எங்கும் நீ
கை வீசி நடக்கணும்.

உன் இருப்பை எப்போதும்
உறுதி செய்யணும்.
உண்மைதான்

உருப்படியாய்
என்ன செய்தாய் இதற்கு?

ஊருக்கு சொல்ல
உன்னிடம் நிறைய உண்டாயினும்
உன்னிடம் சொல்ல
ஏதேனும் உண்டாவென
உன் மனச்சாட்சியைக் கேள்

ஆமெனில்..

நீ கரைவதை தொடர்
ஆயினும்
சில வார்த்தைகளைத் தவிர்
அதைப் பின் காலம் சொல்லும்

இல்லையெனில்..

இனியாவது
சிந்தனைகொள்

மானிடப் பேரவலம் கண்டாவது
உன் மனக்கதவு திறக்கட்டும்

இரும்புச் சிறையுடைத்து
புது மனிதனாய் வெளியே வா!
விடுதலை பற்றி
அப்போது கதைப்போம்

நசிக்கப்பட்ட குரல்வளைகளே
உரிமைக் குரலை
உரத்தொலிக்கும் போது

சில திறந்த குரல்கள் மட்டும்
ஏனிங்கு மௌனித்து கிடக்கின்றன

தெருக்கள் களவு போகும் போதும்
நல்ல உறக்கம் எப்படி உனக்கு வருகிறது

வெறும் கொள்ளி வைக்க மட்டும் தானா
அன்னை பெற்றாள் நம்மை

அன்னை மண் காப்பதை
பிள்ளையன்றி யார் செய்வார்?
அடுத்தவன் வருவானோ சொல்?

நம்பிக்கைச் சிறகு நமக்கிருந்தால் தானே
சிகரத்தை நோக்கி உயரப் பறக்க முடியும்

கூரை ஏறவே சிறகு வலித்தால்
வானாய் விரிந்த சுதந்திரத்தை
எப்படி உன்னால் அனுபவிக்க முடியும்

அண்ணனை நெஞ்சில் எண்ணிடும் நெஞ்சங்கள்
அஞ்சி வாழுதல் முறையோ சொல்லுங்கள்

மண்ணினில் ஆயிரம் மறவரை விதைத்த நாம்
பகையிடம் மண்டியிட்டுப் போவோமா சொல்லுங்கள்

எங்கள் தம்பிகள் தங்கைகள் செய்திடும் போருக்கு
உரமாய் இருக்க எதையோ செய்யுங்கள்

ஆயிரம் போரினில் நாங்கள் தோற்றாலும்
இலட்சியப் போரினில் வெல்வதுதான் நம் இலக்கு

விடுதலைத் தீயது அணையாது

நெஞ்சு நிமிர்த்தி நில்லுங்கள்
வாழ்வா சாவா வரட்டும் பார்ப்போம்


தமிழா!
இது விடுதலைப் பயணம்
வேறு வழியின்றிப் போனதால்
தெரிந்து தான் குதித்தோம்

ஏதிரியை எதிர்ப்பதும்
அவன் தரும் வலியினைச் சுமப்பதும்
இறுதியில் வெற்றி பெறுவதும்
நாங்களாய் தான் இருக்கணும்

இதை விதியென்று சொல்லாதே
இது தான் வாழ்வென்று சொல்லிடவே
எங்கள் வரலாறு விரும்புகிறது.

துயரம் இமயமாய் உயர்ந்தாலும்
விடுதலைப் பறவைகளுக்கு
எப்போதும்
வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான்

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள் உமதாகட்டும்
நாளைய பொழுது நமதாகும்



கோடி உயிர்களில்
ஊறி வழியும்
காதல் ஒன்று
காட்சியில் நுழைகின்றது.

தேடித் தேடி
தொலைந்து போகும்
தேடலாகி
புதுக் காவியம் வரைகின்றது.

யுகங்கள் மாறி
உலகம் சுருங்கி
உள்ளங் கையில் சுழன்றாலும்

இதயம் நுழைந்த
உறவின்
வருகை நினைந்து
நகரும் நாட்கள்
யுகம் போல் தெரிகின்றது.

கால வெளியில்
நடையாய் நடந்து
கால்கள் வலிக்கிறது.
நாட்கள் மட்டும்
நகர மறுக்கிறது.

என் உறவைச் சுமக்கும்
இரும்புப் பறவை
இத் தேசம் வரும்நாள்
இன்றாய் மாறாதா?

அத் திருநாள் காண
கழியும் பொழுதெல்லாம்
நானே சேமிக்க..

காத்திருப்பு என்னவோ
இன்னும் கனதியாய்
இன்னும் இன்னும் நீளமாய்…

காத்திருத்தல் என்பது

ஒரு கடற்கரையிலோ
குளக்கரையிலோ
அல்லாமல்
விமான நிலையத்தில் என்பதால்

இதயம் இன்னும்
விரைவாய் அடிக்கிறது.
அந்த வானின் உயரம்
சென்று பார்க்க
துடியாய்த் துடிக்கிறது



எங்கோ பார்த்தேன்
அங்கே தொலைந்தேன்
என்பேனே
அது இவளைத்தான்

என்றோ பார்த்தேன்
அன்றே தொடர்ந்தேன்
என்பேனே
அது இவள் காலடித்தடம் தான்

நான் மெல்லிசை ரசித்த
முதல் பொழுதொன்று
சொல்வேனே
அது பிறந்தது
இவள் கொலுசில் இருந்துதான்

நான் தினம் தினம் இசைத்திடும்
பல்லவி இருக்கிறதே
அது பிறந்தது
இவள் மொனத்தில் இருந்துதான்

சூரிய தேவன் ஏவிய கதிராய்
எனைச் சுட்டெரித்த
கதை சொல்வேனே
அது
இந்தக் கண்கள் தான்

வண்டுக்கு மலர்ந்த
வாசமலரையெல்லாம்
சூடிக்கொள்ளும் வசியக்காரி
என்பேனே
அவள் இவள்தான்

உன் புன்னகை என்பது
என்ன விலை என
எனைப் பிறர் கேட்பதெல்லாம்
இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான்

அப்பாவிய் நான் அன்று
அழுது புரண்ட கதை ஒன்று சொல்வேனே
அப்போது
எனை அடித்துச் சென்றவள் இவள் தான்

காவலர்களே!
இவளைப்
பிடித்துச் சிறையில் அடையுங்கள்

நானிருக்கும் பைத்தியக்காரச்
சிறையிலல்ல

வெளியில்
எங்கும் எரிகிறதே
தீ
அதை மூட்டிவிட்டு
உள்ளிருக்கும்
காதல்த்
தீவிர வாதிகளுடன்.




பச்சைக் குழந்தை அங்கே
பாலுக்கு அழுதிருக்க
பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்
என்னைக் கடவுளென்று
மனிதன் வணங்குவானோ சொல்?

சத்தியமாய்
அந்தக் கல்லுக்குள்ளே
நான் இல்லையெடா!

மானிடா!
நான் கருணையுள்ளவன்.
ஏழை நெஞ்சுக்குள் தான்
எப்போதும் இருப்பேனடா!

உன் இரத்த உறவுக்கங்கே
பாதி உயிர் போகையிலே
எப்படி நான் கொலுவிருப்பேன்?
நீயமைத்த மஞ்சத்திலே!

எப்போதடா நான் கேட்டேன்?
இப்போது நீ எனக்கென்று
செய்வதெல்லாம்..

வானமே கூரையாய் உன் உறவு
வாழ்வுக்கு வரமிருக்க
கோபுரக் கோயில் கட்டி
என்னை குடியிருக்க நீ கேட்டால்
எப்படி இருப்பேனடா சொல்?

அப்படி நான் இருந்தால்
மனிதன் வணங்கும் தெய்வம்
எனும் தகுதி
எனக்கிருக்குமோ சொல்?

மானிடா!
நான் கடவுள் எனும் பெயரில்
அந்தக் குடிலில்
குடியிருக்க வேண்டுமடா!
என் கடமை செய்து
கண்ணயர வேண்டுமடா!

உன்னைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.
கோடியில் கோயில் கட்டி
அழைத்தென்னைப்
பழிகாரன் ஆக்காதே!
நீயும் பெரும் பாவம் செய்யாதே!


சத்தியமாய் சொல்கின்றேன்
இப்போது
அங்குவர என்னால் முடியாது.

உள்ளம் கோயில் என்றும்
அன்பே தெய்வமென்றும்
எத்தனை முறையடா சொல்வது!

இனி எப்படியெடா?
உனக்கு உரைப்பது
என் பொருளை..

ஏதோ
என்னைத் தேடி வருவதாய்
சொல்லி
தூரவே போகின்றாய்.

வேண்டுதல் என்றெண்ணி
வீண் விரயம் செய்கின்றாய்.

எனக்கு விழா என்று
உனக்கே விழா எடுக்கின்றாய்.

எனக்கு படைப்பதாய் சொல்லி
நீயே தின்கின்றாய்.

ஏழை பசியிருக்க
ஏப்பம் விடுகின்றாய்.

பெயருக்கும் புகழுக்கும்
பெரும் பணம் இறைத்துப் பின்
கொலரை எடுத்துவிடும்
நீயெல்லாம்…?

எப்படி இருக்கலாம்
என் பக்தனாய்?

எப்படி நான் உண்பேன்
உன் பாவச் சோற்றை

யாருக்கு நான் உரைப்பேன்
உன் ஈனச் செயலை

உண்மையில்
நான் உண்டு உறங்கி
ரொம்ப நாளச்சு
அந்த ஏழைகளைப்போல்..

தயவு செய்து
என் நிலையை நீ
கொஞ்சம் புரிந்து கொள்
மானிடா!

நான் கண்ணீர் வடிப்பதை
இனியாவது கண்டுகொள்
மானிடா!

எப்படி எப்படியோ என்னை வைத்து
பிழையாய் நீ பிழைக்க
என்ன பாவம் நான் செய்தேன்
அணு அணுவாய் நான் இறக்க
அந்த ஏழைகளைப்போல்

மானிடா!
ஓன்று மட்டும் கேள்
நிச்சயமாக
நீ திருந்தும் போது
நீயின்று வேண்டும் வடிவில்
நான் இருக்க மாட்டேன்.

ஒன்றில் இறந்திருப்பேன்
இல்லை
அன்பென்ற வடிவில் உறைந்திருப்பேன்.

தயவு செய்து முயற்சி செய்
என்னை முழுதாய்க் கொல்ல
அல்லது
அன்பென்ற வடிவில்
என்னை எப்போதும் காண

அது வரை
நான் ஏதும் தவறுரைத்தால்
என்னை மன்னித்து விடு
இல்லை தண்டித்து விடு
வழமை போல

இப்படிக்கு
உண்மையுடன்
உங்கள் கடவுள்
அன்பே தெய்வம்



நேற்று
என்றொரு பொழுது
இன்று போலுள்ளது
என் நினைவில்

நீல வானம்
ரொம்ப தொலைவில்
காற்றுக்கூட
அன்று ஓய்வு
நிசப்தம் எங்கும்
நிரம்பி வழிய
நீள நடந்தேன்
என் வழியில்

பட்டுடுத்தி ஒரு
பட்டாம் பூச்சி
சிறகடித்தென் முன்
பறந்து போக

புயலடித்துப் போனதென்
மனதுக்குள்
நான் சிறகடித்துப் பறந்தேன்
அந்த
வானின் உயரத்தில்

இதயம் மட்டும்
சிறைப்பட்டது
அந்த சிறகுக்குள்



ஓ!
என் உறவுகளே!
ஒரு மரத்துப் பறவைகளே!

ஏக்கமே வாழ்வாய்
வானமே கூரையாய்

ஆன திசை முழுதும்
தணல் அள்ளி எரித்து நிற்க

கால நதி வெள்ளத்தில்
கரை ஒதுங்கிய சருகுகளாய்

நேற்றிருந்த வாழ்வு தொலைத்து
நீண்டு நெடிய பயணத்தில்
நிர்க்கதி நிலையில்
கானகத்தின் வாசல்களில் இருந்தபடி

உள்ளிருந்து உங்கள் குரல்
உலகின் திசைகளை நோக்கி

என்ன பாவம் நீர் செய்தீர்
வழமை போல்
யாரிற்குமே கேட்கவில்லை
இம்முறையும்

இரத்தோட்டம் மட்டும் இருந்தால் போதாது
சற்று ஈரம் நொதித்தால் தான்
அது இதயம்

நாம் வாழ்வதோ
இதயங்கள் அரிதான உலகத்தில்

பகுத்தறிவு செத்தவனை
மனிதன் என்று எவன் சொல்வான்

நாம் வாழ்வதோ
மிருகங்கள் நிறைந்த பூமியில்

ஈகை இருந்தால் தான் அது மனிதம்
இல்லையெனில்
அது
நடக்கும் நடக்கும் என்று
நாளைக்கடத்தும்
நடக்கும் பிணம்


நாம் வாழ்வதோ
பிணங்கள் நிறைந்த யுகத்தில்


உறவுகளே!
அம்மா உள்ளே பசித்திருக்க
வெளியே அன்னதானம் கொடுக்கும்
இதயம் படைத்தவன் நானல்ல

என் அன்னை மண் வாசம்
அதுவுமல்ல

என்னை அப்படி
என் அன்னை வளர்க்கவும் இல்லை

மன்னித்து விடுங்கள்
உறவுகளே!

இன்றிரவு
சிலதுளி கண்ணீர் மட்டுமே
உங்களிற்காக என்னிடம்..

நாளைய பொழுது விடியட்டும்
என் வியர்வை சொட்டும்
வெள்ளிப் பணம் சேர்த்து
உங்கள் வாசல் சேர
நான் உழைப்பேன்

அதுவரை
உங்களுடன் நான்

உண்ணாமல் உறங்காமல்
உள்ளத்தில்
உறவினை சுமந்தபடி



என்றோ?
ஆரம்பித்து விட்டேன்.
என் பயணத்தை..

பல தேசங்களின்
எல்லைகள் தாண்டி
எங்கோ?
சென்று கொண்டிருக்கின்றேன்.

எப்போது போவாய்?
என்று
ஏசுவோரை கடந்து..

எப்போது வருவாய்?
என்று
ஏங்குவோரின் வாசலில்
இப்போது நான்.

என் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒரு கூட்டம் தெரிகின்றது.

அதோ!
அதில்
ஒருத்தி

உறவையெல்லாம்
பிரிந்து வந்து
உள்ளத்தில்
கனவுகள் சுமந்தபடி
வெற்றுக் குடத்தோடு
வெயில் கொல்லும்
காலப் பெரு வெளியில்
கால் கடுக்க
காத்து நிற்கின்றாள்.
என் வருகைக்காக..

இதோ!
அவளின்
காலடித் திடலில்
இப்போது நான்..

நன்று
உண்டு
உடுத்து
உறங்கி
நாளாச்சு என்பது
நன்றாய் தெரிகின்றது.

என்னால்
என்ன செய்ய முடியும்?
இப்போது அவளுக்காக..

என்
உதிரமோ
வியர்வையோ கொடுக்து
அவள் தாகமாவது தீர்க்க
ஏங்குகின்றேன்.

ஆனாலும்..

ஒரு கணம் நின்று
சில வார்த்தை பேசி
என்னிடம் உள்ளதை
அவள் குடம் கொள்ள
என்னால்
அள்ளிக் கொடுக்க முடியாமல்
எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
சரிவை நோக்கி..

அவளோ
ஏக்கத்துடன்
என்னைப்பார்த்தபடி
சற்று தள்ளியே நிற்கின்றாள்
தன் கால்களைக்கூட
நான் தொட்டு
வருந்தியழுது விட்டுப்போக
முடியாத தூரத்திரல்.....



மலரே!
தென்றல் தேடிய
முகவரி நீ.
முகவரி மாறிய
தென்றலின்
முதல் வரியும் நீ.

தென்றல் தீண்டிட
நீ மலர்ந்தாய்.
தென்றல் உன்னைத்
தொட்ட போது
நீ நிலை தடுமாறினாய்.

தென்றல் சுமந்த நீரால்
நீ நனைந்தாய்.
தென்றல் உன்னை
அணைத்தபோது
நீ ஏனோ
தலை குனிந்தாய்.

மழை கழுவிய
மலரே
உன் வாசம் போனதாய்
வருந்தாதே
வாழ்வு முடிந்ததாய்
புலம்பாதே

மலர் தழுவிய என்னில்
சுவாசமாய்
உன் வாசம்

இன்று நான் மண்னோடு
உன் வாசம் மீண்டும் காற்றோடு

நாளை நீ என்னோடு
உன் வாசம் அதே காற்றோடு

கலங்காதே!
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல
உலகிற்கே இதுதான் நியதி.


அதிகாலை இதுவென்று
விடிவெள்ளி
சொன்ன பின்பும்

சேவல் விழித்து
சோம்பல் முறித்து
காலை விடிந்ததென்று
கூவிய பின்பும்

கோபுரத் திசையிருந்து
கோயில் மணி ஒலித்து
கும்பிட வாருங்கள்
ஏன்றழைத்த பின்பும்

சூரியன் எழுந்து
இருளைச் சலவை செய்ய
வானம் வெளுத்த பின்பும்

புல்லில் தூங்கிய
பனிக்கூட்டமெல்லாம்
மண்ணுக்குள் நுழைந்து
வேரோடுறவாடச்
சென்ற பின்பும்

மொட்டுக்கள் மலர்ந்து
வண்ணங்கள் தெளித்து
விடிகாலைப் பொழுதொன்றை
வரவேற்ற பின்பும்

அதிகாலைத் தென்றல் வந்து
காலை வணக்கம்
சொல்லி என்னை
ஆரத்தழுவிய பின்பும்

எனக்கு ஏனோ விடியவில்லை

ஏனெனில்
என் தாவணிப் பூ
இன்னும் பூக்கவில்லை
என் கண்களில்

என் காதல் தெய்வம்
இன்னும் எனக்கு
தரிசனம் தரவில்லை

ஆதலால் எனக்கு
இன்னும் விடியவில்லை


கண்கள் பேசிக்கொண்டன
அது காதல் பரிபாசை

இதயம் இடம் மாறியது
அது காதல் சம்பிரதாயம்

மௌனங்கள் பேசிக்கொண்டன
அது காதல் மொழி

வார்த்தைகள் பேச முனைந்தன
ஆனால்
சொற்கள் தொலைந்து போயின

ஆனாலும்
காகிதம் போட்டிட
முகவரி கிடைத்தது
எஞ்சிய வார்த்தைகளில்

மின்னஞ்சல்;;…
நவீன காதல் தூது

உள்ளத்தில் இருந்ததை
உள்ளபடி சுமந்தது

என் உள்ளடக்கத்தில் இருந்தது
உனக்கான காதல் கடிதம்

உன் உள்ளடக்கத்தில் இருந்தது
உலகறியா புது மொழி

எந்தக் காதலனும் கண்டிடாத
புது வார்த்தை

சொல்லிவிடு அன்பே
என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net