புல்லோடும் புயலோடும்
கல்லோடும் கடலோடும்
பேச முடிந்த
கவிஞர்களே!

என்ன திடீர் மௌனம்
உங்களுக்குள்ளே?

புயலுக்கு முந்தியதா?
பிந்தியதா?
என
உங்கள் மௌனங்களுக்கு
உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?

நல்ல கதை.
புயல்களை
புதிது புதிதாய்
பிறப்பிப்பதே
நீங்கள்தானே.

நீங்களே தூங்கினால்
நாளைய பொழுதுகளின்
நம்பிக்கையை
யார் கொடுப்பது?

நீண்ட இரவுகளின்
இராச்சியத்திற்கு
உங்கள் இமைகளை
அனுமதிக்காதீர்

கசியும் உங்கள்
கண்களைத் துடையுங்கள்

கடலலை மோதும்
ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்

முள்ளிவாய்க்காலில்
சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை
சாட்சியுடன் எழுதுங்கள்

காற்றில் தவழும்
அத்தனை அலைகளுடனும்
உரையாடுங்கள்

கஞ்சிக்கு உயிர் விலை
கொடுத்ததையும்

காற்றே களவாடப்பட்டு
கந்தகமும் பொசுபரசும்
பரிசளிக்கப்பட்டதையும்

மருந்துக்கு
மண் அள்ளிப் போட்டதையும்

பெற்றதாய் மார்பில்
செத்தபின் பால்குடித்த
துயரத்தையும்

என
எங்கள் துயரத்தை
எங்கள் நியாயத்தை
எங்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளை

நீதிக்கு இழைக்கப்பட்ட
அநீதியை

மொத்தமாய்
பதிவுசெய்யுங்கள்

இலக்கு
தெளிவாய் தெரியும்
விடுதலைப்பயணத்தில்
இருள் என்று ஒன்று இல்லை.
இருப்பின்
அதன் பெயர்
குறைந்த வெளிச்சம்
என்று
உங்கள் கவிதைகள்
தீக்குச்சி கிழிக்கட்டும்

கேளுங்கள் தரப்படும்
தரப்படாவிட்டால்
தரும்வரை கேளுங்கள்

தட்டுங்கள் திறக்கப்படும்
திறக்கப்படாவிட்டால்
திறக்கும் வரை தட்டுங்கள்

என்று
மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்
உங்கள் கவிதைகள்

கவிஞர்களே!
தயவு செய்து
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்

செத்த கவிஞர்கள்
கடமையையும்
நீங்கள் தான் செய்யவேண்டும்

பிறக்க இருந்து
இறந்த கவிஞர்களையும்
நீங்கள் தான்
உருவாக்க வேண்டும்

அவர்கள்
எழுத நினைத்தவற்றையும்
நீங்கள் தான்
எழுதவேண்டும்

அவர்கள்
தொடக்கிவைத்தவற்றையும்
நீங்கள்தான்
முடிக்கவேண்டும்

புறப்படுங்கள்
தூரங்களும்
இதயங்களும்
சுருங்கிப்போன உலகில்
உங்கள் கவிதைகள்
காவியங்களாய் ஊடுருவட்டும்

புயல்களை எதிர்பார்க்க
பூகம்பங்களை எதிர்கொள்ள
ஓவ்வொரு தமிழனுக்கும்
கற்றுக் கொடுங்கள்

அதோ
தொலைவில்..

“போர் இன்னும் ஓயவில்லை
எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”

ஒரு கவிஞன் உடைத்த
மௌனம் பேசுகிறது

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”

இன்னொரு கவிஞனின்
நம்பிக்கை பேசுகிறது.

எங்கே
நீங்களும்
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்

உடைக்கும் போது
மறக்கவேண்டாம்
நம்பிக்கையையும்
விடுதலை வேட்கையையும்
விதைப்பதற்கு

அன்பானவர்களே!
உங்கள் பேனாக்கள்
துளித்துளியாய்
கரையட்டும்

வார்த்தைகள்
தீப் பொறியாய் வீழட்டும்

அதுவே
தமிழர் மனங்களில்
உலகின் திசைகளில்
ஈழ விடுதலைப் பெருந்தீயை
அணையாது எரிக்கட்டும்.




கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக் காதலி.
09.02.2009

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net