undefined
undefined


மழை பொழியும் ஓர் நாளில்
மலர் சூடும் கல்லறைகள்
உமைப் பிரிந்த உறவெல்லாம்
உமைத்தேடி வந்திருக்கும்

உமைத்தேடி அழுதழுது
உம்முன்னே உயிர் துடிக்கும்
உமக்கென்று ஏதேதோ
கொண்டு வந்து சேர்த்திருக்கும்

மணம் நிறைத்த மலராலே
மாலைகளும் அவை சூடும்
மனம் நிறைந்த வேதனையால்
விழி நீரை அவை சிந்தும்

அண்ணன் உரை தொடர்கையிலே
அமைதியாக செவிமடுக்கும்
மணியோசை ஓய்ந்த பின்னே
மௌனமாக அஞ்சலிக்கும்

வேளை வந்து சேர்ந்தவுடன்
விளக்கொன்றை அவை ஏற்றும்
மழைத்துளிகள் வீழ்கையிலும்
சுடர் ஒளிரும் கல்லறை முன்

சுடர் ஒளியின் நடுவினிலே
முகம் தெரியும் இரவினிலே
முகம் காணும் விழிகள் எல்லாம்
குளமாகும் நீராலே

நீர் வழிந்த முகங்கள் எல்லாம்
உமை நினைந்தே சிவந்திருக்கும்
நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்
வந்து வந்து போயிருக்கும்

நீர் நிறைத்த நினைவுகளோ
நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்
நீர் சுமந்த கனவதுவோ
நிமிர்ந்து நட என்றிருக்கும்

உங்கள் பணி தொடர்ந்திடவே
உறுதியெடு என்றிருக்கும்
விடை பெறும் வேளையிலே
விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்
உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்
உம் பணி தொடர..

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net