உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
என்றைக்கும் சொல்லமுடியவில்லை.

வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.

என ஒரு ஊமை புலம்புகின்றான்.

அவன் வரிகளில்….

ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன
மானிட உணர்வுகள்.

இன்னும் இன்னும்
வந்து விழுகின்றன.
குறையாய்ப் பிரசவிக்கும்
ஒரு மனிதனின் வரிகள்.

பேச முடியாததால்
தான் பூரணமடையாதவனாய்
புலம்புகின்றான்.

குறைபாடு உடையவனாய்
குற்றம் சுமத்துகின்றான்
தன்மீது.

ஆனால்…
அவன் உணர்வதையே
நானும் உணர்கின்றேன்.

அவன் சொல்வதையே
நானும் சொல்கின்றேன்.

அவனுள் நிறைந்து வழியும்
மானிட உணர்வுகளே
என்னுள்ளும் வந்து விழுகின்றன.
அவன் சுமப்பதையே
நானும் சுமக்கின்றேன்.

ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்.

இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்?

நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?

இல்லை
என்னைச்சுற்றியுள்ளவர்கள்
குறைபாடுடையவர்களா?
பூரணமடையாதவர்களா?
என

என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.

அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.

ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net