பூ மலரும் காலையிலே
வான் நுழைந்து வண்டு வரும்

கோயில் மணி ஓசை முன்னே
கிபீர் வந்து வட்டமிடும்

குலதெய்வம் துணையிருந்தும்
குண்டு வந்து கூரை விழும்

ஆன திசை அத்தனையும்
அவலம் எழுந்து சத்தமிடும்

ஓலமிடும் ஒலியோடு
உயிர் வேறாய் போயிருக்கும்

பிறகென்ன?

கூட்டி அள்ளும் படியாய்த்தான்
குதறுப்பட்ட குடியிருக்கும்

கோலமயில் அழகான
குல வாழ்வு முடிந்திருக்கும்

வான் உயர்ந்த கனவுகளில்
கந்தகம் கலந்திருக்கும்

வளமான வாழ்வதனில்
புழுதி மண் படிந்திருக்கும்

நிலவு காய்ந்த முற்றத்தில்
நெருப்பெரிந்து போயிருக்கும்

மின்னலைகள் வழியாக
விழி கசியும் செய்தி வரும்

பத்திரிகைப் பக்கங்களில்
இரத்தம் தோய்ந்த படமிருக்கும்

கண்விழித்துப் பார்த்துவிட்டு
வழமைக்கு நாம் போய்விடுவோம்.

இல்லையெனில்…
நெஞ்சுக்குள் மட்டும்
நெருப்பெரிப்போம்.

மீண்டும்
வான் நுழைந்து வண்டு வர…
கிபீர் வந்து வட்டமிட…
குண்டு வந்து கூரை விழ…

நாமுமொரு காரணமாய்
ஆகும் கதை பெரும் சோகம்.


தமிழா!
உண்மையை உரத்தொலிக்க
உனக்கெதற்கு அச்சம்?

உரிமைக்கு குரல் கொடுக்க
உன்னைத் தடை என்ன செய்யும்?

உறவுக்கு உணவளிக்க
யார் கேட்பார் கணக்கு?

உரிமை உன்னது
கடமையும் உன்னது
காலம் கைகளில்…

மனமிருந்தால் இடமுண்டு.
தன்மான உணர்விருந்தால்
உனக்கு
தமிழன் எனும் பெயருண்டு.

இனி சொல்ல
உனக்கு என்ன உண்டு?
செயல் தொடங்கு…

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net