விடிகாலை விடியாத
அதிகாலைப் பொழுதொன்றில்

அந்த நெட்டூரம் நிகழ்ந்தேற
நெடுந்தூரம் நடந்தோம்.

நெடு நாளாய் வாழ்ந்திருந்த
ஊர் பிரிந்தோம்.

இது நாளாய் நாம் வாழ்ந்த
வாழ்விழந்தோம்.

கால்கள் போனதிசையில்
காடு மேடெல்லாம்
நாம் நடந்தோம்.

மேனி சோர்ந்து
வீழும் நிலையில்
இன்னுமொரு ஊர் சேர்ந்தோம்.

வெயிலுக்கு நிழல் தந்த
வாகை மரமொன்று
எங்கள் வீடானது.

தொண்டு நிறுவனம்
கொண்டு தந்ததில்
ஒரு குடிசை செய்தோம்.

இழந்த நாட்களின் இனிமையை
நெஞ்சுக்குள் பொத்தியபடி

வாழும் நாட்களின் வலிகள்
விழிகளில் நிறைந்து
உவர் நீராய் வழிந்தபடி

போர்க் கோலத்தில்
புதிதாய் ஒரு வாழ்வு
வேம்பின் சாறாய் கசக்கிறது.

காட்டு முற்றம்
எங்கள் வீட்டின் அறையானது.

ஓட்டைக் குடிசையினூடு
கொட்டும் மழை
முற்றும் உள்ளே நுழைந்து
வருகிறது.

எங்கள் வீட்டு வாசலில்
சோகம் வெள்ளம் போடுகிறது.

வெறும் சோற்றுக் கோப்பையை
கண்ணீர் தாரை தாரையாய்
நிறைக்கிறது.

வெற்று வயிறு வேக
நினைவு நெருப்பாய் எரிந்தபடி
செத்துப் போகும் நிலையில்
இப்போது நாங்கள்

என்றபடி
ஒன்று இரண்டல்ல
ஓராயிரம் குரல்கள்
உள்ளிருந்து ஒலித்தபடி

தினம் துயர் எடுத்து நுகரும் வாழ்வு
உயிர் விலை எடுத்தபடி
நகரும் நாட்கள்

ஒரு துளி பருகவாவது
அவன் தாய் முலை சுரக்க
அங்கேதும் இல்லாமல்
ஒரு குழந்தை

ஒரு பிடி அரிசி போட்டாவது
உலையேற்றும் ஆசை
அவன் உயிர் பிரியும் வரை
நிறை வேறாது போக
கதறும் அதன் தாய்

இப்படி ஒன்று இரண்டல்ல
பல நூறு கதைகள்

இது தான் வாழ்வெனில்
எது நாள் வரை சுமப்பது
நம் உறவுகள்?

இன்னும் எத்தனை
சின்ன விழிகளை
நாம் இழப்பது?

அவன் சுடு குழல் கொண்டும்
பொருள் தடை கொண்டும் வதைத்திட
நாம் சும்மா பார்த்துக் கிடப்பதா?

உலகெல்லாம் உணவுகொடுப்போர்
அங்கே உண்ண ஏதும் தராமலே
போகின்றார் பாருங்கள் வெளியே

வெறும் தண்ணீர் மட்டும் மென்று
சாவைத் தவிர்க்க முடியலையே!

சோகம் சொல்லி அழுதிட
இனிக் கண்ணீர் கூட
அங்கு இல்லையே!

உறவென்று சொல்ல
உரிமையுடன் கேட்க
நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்

உறவுகளே!
பல கடைசி மூச்சுக்கள்
இன்னும் இருப்பது
உங்களை மட்டும் நம்பியே
வாழ்வளிக்கும் தெய்வங்களே!
வரமாய் போடுங்கள்
உயிர் காக்க..!

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net