undefined
அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
வண்ணமயில் ஏறிவரும்
வடிவேலனுக்கு
அரோகரா
முருகா!
என்னப்பா இது?
இனம் மொழி தாண்டி
உன்ர வாசலிலை நிறையுது
பக்தர்கள் வெள்ளம்
கடையில விக்கிற
பிள்ளையார் சிலையில
மேடின் சைனா இருக்கு
கடைக்குட்டிக்கு வாங்கிற
அம்மம்மா குழலை
வடக்கத்தையான் விற்கிறான்
ஐப்பான் காரன்
வந்து
“சோ” றூம் போடுறான்
பாகிஸ்தான் காரன் வந்து
பாய் வி(ரி)க்கிறான்
கண்ணுக்கு தெரியிற
இடமெல்லாம்
துரோகிகள் கூட்டம்
கண்கட்டி
வித்தை காட்டுது
சிங்கள தேசம்
வெள்ளை வேட்டி கட்டி
சுது மாத்தையாக்கள்
வெறும் மேலோட
களு பண்டாக்கள்
போதாக்குறைக்கு
விமானச் சீட்டுக்கு
விலைக்குறைப்பு
ஊரடங்குச்சட்டத்துக்கு
நேரக்குறைப்பு
ஏ ஒன்பது
பாதை திறப்பு…
இப்படி நீளுது
திருவிளையாடல்
எங்களுக்கு மட்டும்
ஓர வஞ்சனை
முன்னூறாயிரம் பேருக்கு
முள்ளுக்கம்பிச் சிறை
பலபேருக்கு
இலங்கை வரத்தடை
ஏனெனில்
நாங்கள் கேட்டது
அலங்காரச் சுதந்திரமல்ல
ஆனந்த சுதந்திரம்
உனக்கென்னப்பா
நூறு குடத்தில அபிசேகம்
மண் போட்டால்
மண் விழாத
மக்கள் கூட்டம்
வண்ண மயில் ஏறி
வள்ளி தெய்வயானையோடு
வடிவழகு வருகை வாழ்வு
கந்தா
கடம்பா
கதிர்வேலா
உன்ர வீதியில இருந்துதான்
எங்கள ஏமாத்த நினைச்சவங்களை
கண்டு பிடிச்சனாங்கள்
உன்ரை வீதியிலை
பசித்திருந்துதான்
ஒரு பிள்ளை
வடக்கத்தையான்
முகத்திரை கிழிச்சவன்
எங்கட மக்கள் மறந்தாலும்
நீயாவது மறக்காமல்
இரப்பா
உனக்காச்சும்
ஒரு சமயத்தில
கோவணம் மிச்சம்
இப்ப கொட்டாவி விடுற
எங்கட சனத்துக்கு?
எல்லாருக்கும் நல்லவரம்
நல்கும்
தமிழ்க்கடவுளே
முருகா
எனக்கும் ஒரு வரம்
தந்துவிடு
திருந்த நினைக்காத
சனத்தை திருத்தவும் வேண்டாம்
முள்ளுக்கம்பி
வளவுக்குள்ள
வருந்திற எங்கடை சனத்துக்கு
வாழ்வளிக்கவும் வேண்டாம்
இனக்கொலை புரிந்த
தென்னிலங்கைக்கு
தண்டனையும் வேண்டாம்
வஞ்சகத்தோடை வளவுக்குள்ள
வாறவங்களை
கண்டு பிடிக்கவும் வேண்டாம்
உனக்கு கொஞ்சம் பக்கத்தில
காக்கா பீச்சினபடி
நிற்கிற சங்கிலியன்
சிலை
மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற
மாவீரன் பண்டாரவன்னியன்
கல்லறை
முன்னர் கண்டியை
ஆண்ட
விக்கிரம ராஜசிங்கன்
ஆழக்கடலாண்ட
சோழ மகாராஜன்
தமிழர் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகிற
விடுதலைப் பெருநெருப்பு
பிரபாகரன்
இப்பிடி
மண்ணிலை முளைச்சிருக்கிற
வரலாறை
உன்ர பக்தர்களுக்கு
நினைவிருத்து
அதுபோதும்
வரலாறு விட்ட வழியில்
காலம் இட்ட கட்டளைப்படி
சிங்கள அந்நிய ஆதிக்கம்
அகன்ற நாள் வர
நாங்களும்
ஒரு நாள்
உன் வாசல் வருவோம்
அதுவரை
அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
வண்ணமயில் ஏறிவிளையாடும்
வடிவேலனுக்கு
அரோகரா