ஒரு சிறு பறவை,
பருந்துன்னை கொத்திப்போகும்.

விடுபட நினைப்பாய்
முடியாது!
சிறகினை விரிப்பாய்
சிறையில் தான் இருப்பாய்!

ஒரு திசையிருந்து மட்டுமே
காற்று வரும்.
தவமிருந்து பெற்றுத்தான்
சுவாசிப்பாய்.

ஒரு சோற்றுடன்
வயிறு நிறையும்.
நிறைய தாகம் எடுக்கும்.
உறக்கம் தூரம் போகும்
கலக்கம் அதிகமாகும்.

ஐந்து புலன்களுக்கும்
நரை விழும்.
ஆறாம் அறிவுக்கு
ஆயுள் குறையும்.

பல நூறு முறை
தொலைவாய்.
சில வேளைகளில்
இறந்து கூட போவாய்.

பெரு வெளியெங்கும்
ஒரு பூவே
பூத்து நிறைந்திருக்கும்.

நின்றால் நிற்பாய்
நடந்தால் நடப்பாய்
உண்டாலும் உண்ணமாட்டாய்
முறைத்தாலும் சிரிப்பாய்.

ஒரு வீட்டில்
ஒரு யன்னலில்
மட்டுமே
உன் பார்வை குவியும்

ஒரு ஊர்
ஒரு பாதை
என உன் உலகம்
சுருங்கிப்போகும்.

இருவரும் மட்டுமே
இவ்வுலகில் என
உணர்வாய்.

தரிசனம் வேண்டித் தவமிருப்பாய்.
தவற விட்டால்
தவியாய் தவிப்பாய்.

அத்தனை நரம்பும்
மொத்தமாய் வெடிக்கும்.
அணு உலை வெப்பமாய்
இரத்தம் கொதிக்கும்.

நிமிடத்திற்கு நூறு முறை வரை
இருதயம் துடிக்கும்.
சில வேளை துடிக்காமல் நிற்கும்.
அப்போது இறக்காமல் இறப்பாய்.

உன் மன வெளியில்
ஒரு முகம் மட்டுமே
தினம் உலவும்

ஒரு பொய்யாவது சொல்லும்படி
பல முறை கெஞ்சுவாய்.
சிறு புன்னகைக்கு
உன் உயிர் வரை விலை
கொடுக்க துணிவாய்.

எப்போதும் அருகிருக்க
நினைப்பாய்.
எப்போது முடியுமென
ஏங்குவாய்.

விளையாட்டுப் பிள்ளையாய்
அழுவாய்
சிரிப்பாய்
சினப்பாய்.
விடையில்லாக் கேள்விகள்
குவிப்பாய்.

ஒரே நாளில்
ஒரு யுகக் கவிஞனை
விஞ்சுவாய்.

பகல் இரவாய்
கனவு காண்பாய்.
கனவு முழுக்க
உன் உலகையே காண்பாய்.

பிழை பிழையாய்
பாட்டுப் படிப்பாய்.
அருகிருப்பவரை
உயிருடன் கொல்லுவாய்.

தொலைத்த வருடங்கள்
அதிகமாய் இருக்கும்.
சேர்த்த நிமிடங்கள்
சொற்பமாய் இருக்கும்.

ஏதோ வளைவில்
தானாய் நடப்பாய்.
பாதி வழியில் தடுமாறி நிற்பாய்.
மீதி வழி தெரியாது
தவிப்பாய்.

பாவம் நீ…




செல்லமே!

உன்
இதயச்சிறையில்
இன்னும் பல்லாண்டு
சிறை வை.

காந்தக் கண்களால்
மீண்டும் மீண்டும்
கைது செய்.

வார்த்தைகளால்
வதை செய்.
பரவாயில்லை

ஈரமில்லாமல் நட
ஏனென்று
கேட்கமாட்டேன்.

கனவுகளையெல்லாம்
கலைத்துப் போடு.
கலங்கமாட்டேன்.

உண்ண எதுவுமே தராதே!
பசித்திருப்பேன்.

உயிருள்ளவரை உறங்க விடாதே!
விழித்தே இருப்பேன்.

தாகத்திற்கு தண்ணீர் கூட தராதே!
நாவறண்டு துடித்தாலும்
உயிரோடிருப்பேன்.

என்
சோகத்தில் கூட
சேர்ந்து அழாதே!
உனக்காகவும்
நானே அழுவேன்.

இதயத்தில் இடமில்லை
என்று சொல்!
ஏற்றுக் கொள்வேன்.

சிலுவையில் ஏற்றி
பல நூறு முறை
ஆணி அடி.
அப்போதும் சிரிப்பேன்
உனக்காக

ஆனால்
அன்பே
நீ மட்டும்
புன்னகைக்க மறக்காதே!

இந்தச்
சிறைப்பறவைக்கு
உன்
புன்னகையால் மட்டும்
சுவாசம் கொடு.

உன்னைச் சுவாசித்தபடி
இன்னும் நூறாண்டு
வாழவேண்டும்.



பூ மலரும் காலையிலே
வான் நுழைந்து வண்டு வரும்

கோயில் மணி ஓசை முன்னே
கிபீர் வந்து வட்டமிடும்

குலதெய்வம் துணையிருந்தும்
குண்டு வந்து கூரை விழும்

ஆன திசை அத்தனையும்
அவலம் எழுந்து சத்தமிடும்

ஓலமிடும் ஒலியோடு
உயிர் வேறாய் போயிருக்கும்

பிறகென்ன?

கூட்டி அள்ளும் படியாய்த்தான்
குதறுப்பட்ட குடியிருக்கும்

கோலமயில் அழகான
குல வாழ்வு முடிந்திருக்கும்

வான் உயர்ந்த கனவுகளில்
கந்தகம் கலந்திருக்கும்

வளமான வாழ்வதனில்
புழுதி மண் படிந்திருக்கும்

நிலவு காய்ந்த முற்றத்தில்
நெருப்பெரிந்து போயிருக்கும்

மின்னலைகள் வழியாக
விழி கசியும் செய்தி வரும்

பத்திரிகைப் பக்கங்களில்
இரத்தம் தோய்ந்த படமிருக்கும்

கண்விழித்துப் பார்த்துவிட்டு
வழமைக்கு நாம் போய்விடுவோம்.

இல்லையெனில்…
நெஞ்சுக்குள் மட்டும்
நெருப்பெரிப்போம்.

மீண்டும்
வான் நுழைந்து வண்டு வர…
கிபீர் வந்து வட்டமிட…
குண்டு வந்து கூரை விழ…

நாமுமொரு காரணமாய்
ஆகும் கதை பெரும் சோகம்.


தமிழா!
உண்மையை உரத்தொலிக்க
உனக்கெதற்கு அச்சம்?

உரிமைக்கு குரல் கொடுக்க
உன்னைத் தடை என்ன செய்யும்?

உறவுக்கு உணவளிக்க
யார் கேட்பார் கணக்கு?

உரிமை உன்னது
கடமையும் உன்னது
காலம் கைகளில்…

மனமிருந்தால் இடமுண்டு.
தன்மான உணர்விருந்தால்
உனக்கு
தமிழன் எனும் பெயருண்டு.

இனி சொல்ல
உனக்கு என்ன உண்டு?
செயல் தொடங்கு…



தமிழர் எம்
தலைவிதி இது வென்று
அழும் கதை மாற்றுவோம்.

தமிழர் நாம்
யாரென்று
இத் தரணிக்கு காட்டுவோம்.

அடிமையின் தளையது
அறுபடும்
நாளின்று நம் வசம்.

எழு எழு
எழு என்று
எண் திசை எழுப்புவோம்.

எல்லோரும் ஒன்றாகி
எம்
தாய்மடி தாங்குவோம்.

உடையுது உடையுது
அடிமையின் விலங்கென்று
உரத்தே ஒலிப்போம்.

அது பொடி படும்
படி வர
உரமாகி உழைப்போம்.

விடுதலை பெறும்வரை
விழிகளில் நெருப்பேந்தி
விழித்தே இருப்போம.

தமிழீழக் கொடியேற
தெரு தனில் இறங்கியும்
அறப்போர் தொடுப்போம்.

எங்கள் வீரர்கள்
ஆடிடும்
போர் முகம் வென்றிட
தோளோடு தோள் கொடுப்போம்.

அவர் உயிர்விடும் வேளையில்
நினைந்திட்ட தமிழீழம்
இந்நாளில் சமைப்போம்.

தமிழகம் எழும் நிலை
கண்டு
புது நம்பிக்கை கொள்ளுவோம்.

அவர் நெஞ்சினில் எரியும்
எங்களின் உணர்வுக்கு
எப்போதும்
எண்ணையாய் இருப்போம்.

கைகளில் எடுத்திட்ட
கடமையை கண்டு
அவர்
கரங்களைப் பற்றுவோம்.

எமக்காய் உயரும்
அக் கரங்களைத் தொட்டு நம்
கண்களில் ஒற்றுவோம்.

நாம்
இன்னும்
கற்பனை வீட்டினில்
நித்திரை செய்திடும்
கனவினை கலைப்போம்.

நித்தமும் ஒருவரில்
குற்றமே கண்டிடும்
பழக்கத்தை மாற்றுவோம்.

வெறுஞ் சொல்லினை
நிறுத்தி
செயலினை தொடருவோம்.

குப்பையாய் போன
வைத்து நாம் காத்திடும்
கொள்கைகள் துறப்போம்.

எங்கள் கொற்றவை பற்றிடும்
கொள்கையை நாங்களும்
கற்றிடத் துணிவோம்.

தினம் களத்திடை வீழ்ந்திடும்
தாயவள் புதல்வரை
யாவரும் நினைப்போம்.

தாயகம் காத்திட
சாவினை அணைத்தவர்
சாதனை பாடுவோம்.

எம் சந்ததி வாழ்ந்திட
தம்மையே தந்தவர்
தெய்வங்கள் போற்றுவோம்.

அந்தக் கல்லறை தெய்வங்கள்
கால்த் தடம் பற்றி
நாம் நேர் நடப்போம்.

காவிய நாயகன்
காட்டிடும் திசையெலாம்
கால்களைப் பதிப்போம்.

எமைத் தாங்கிய தாயவள்
கை தொழும்
அடியவர் ஆகுவோம்.

அவள் ஆனந்த சுதந்திரம்
அடைந்திடும் நாளினை
நாமெலாம் அமைப்போம்.

கொடியவர் முகத்திரை
முழுமையாய் கிழித்திடும்
உறுதியை எடுப்போம்.

தடைகளை தக(ள)ர்த்திட
தலைமுறை காத்திட
தினசரி உழைப்போம்.

கொடுமையின் முடிவுரை
எழுதிடும்
வல்லமை கை வர
பணம் வாரி வழங்குவோம்.

காட்டிடை மழையிடை
வாட்டிடும் பசியினால்
உயிர் மாய்த்திடும் உறவினைத்
தோள்களில் தாங்குவோம்.

புதுச் சரித்திரம் படைத்திடும்
புலிகளின் கரங்களை
புலப் பலத்துடன் பற்றுவோம்.

எமைச் சுமந்தவள்
வலி பெறும் நாளிகை நகர்ந்திட
நாளை
சுகப் பிரசவம் காணுவோம்.

எங்கள் சுதந்திர தேவியின்
விலங்குகள் பொடிபட
கலங்கரையாகுவோம்.









உச்சி மீது வானம் வீழாத
குறையாய்
தினம் கொண்டு வந்து
கொட்டிப் போகிறார் பாருங்கள்!

வேரறுந்தாடி வீழ்ந்து போகின்றன மரங்கள்
சமாதானம் தந்த சுவர்களும் கூரைகளும்
சமாதானம் போலவே சுக்குநூறாகிப் போகின்றன

கூடிழந்து குருதி வெள்ளத்தில் குருவிகள்
குண்டும் குழியுமாய் வீதிகள்
சாமியும் கூட அகதியாய்

தினம் முண்டமும் தலையுமாய்
கொன்று முடிக்கலாம் என்றொரு நினைப்பு
மல்லி மகிந்தாவுக்கு!

முடியாது!
முடியவே முடியாது!
தமிழ்ச்சாதியின் ஆணிவேரை
அறுத்தெறிவதென்பது
நடக்கவே நடக்காது!

எங்கள் ஆண்ம உறுதியின் ஆணிவேர்
அசையவே அசையாது!

குண்டு போட்டு கொதிக்க வைத்திருப்பது
தமிழன் செங்குருதியை…

இன்று
இன மான உணர்வு கொண்டு
தேசமெலாம் வீதியிறங்கியிருப்பது
ஒரு சிறு பொறி
இது நாளை
பெரு நெருப்பாகி முளாசி எரியும்.

பகையே!
நீ வந்து நின்று வாலாட்டுவது
வன்னி மண்ணில்
என்பது நினைவிருக்கட்டும்.

ஆடி முடிக்க தந்த சந்தர்ப்பத்தை
எங்கள் கோடி வரை வந்து விட்டதாய்
கொண்டாடுவது தப்பு
தப்பு மேல் தப்பு!

இருந்து பார்!
இன்னும் சில காலம் தான்
உன் பிடிமானம் எம்மண்ணில்…

எல்லாம் புரக்கும் இறைவன்
வல்ல தலைவன்
திசைகாட்டி விழி அசைப்பான்.

இன்றோ நாளையோ
எங்கள் இதய பூமியின்
சாளரங்கள் திறக்கும்..

ஓயாத அலை கொண்டு
பெரும் புயலடிக்கும்.

அந்தப் பெரும் புயலில்
பொடிப் பொடியாகிப் பறக்கும்
சிங்களப் பேரினவாதக் கனவு.

இடி மின்னல் கொண்டுதான்
விடிகாலை ஒவ்வொன்றும்
இனி எம் மண்ணில் புலரும்.

நீ தொடும் ஒரு பிடி மண்ணுக்கும்
உயிர்ப் பலி எடுத்துத்தான்
பூக்கள் கூட இனி இங்கு மலரும்.

நெருப்பாற்று நீச்சலில்
இப்போது நாங்கள்
ஆயினும் நீந்திக் கடப்பது நிச்சயம்!

கஞ்சிக்கு வழியற்று நாமிருந்தாலும்
காற்றுக்கு இங்கில்லைத் தட்டுப்பாடு
கந்தகம் கலந்து வீசினாலும்
அது தென்றலாய் தான்
எங்களை தொடும்.
வலி மேல் வலி வந்து வதைத்தாலும்
சுதந்திரம் சுமந்துதான்
எப்போதும் நடப்போம்!

எங்கள் நாளைய சந்ததிக்காக..
முன்னாளில் ஆண்ட
எங்கள் மூத்தோருக்காக..
அக்கினித்தாண்டவம் ஆயினும்
ஆடிமுடிப்பதென்றாயிற்று!

கொடுப்பவர் எல்லாம் கொடுக்க
கொண்டுவந்து கொட்டுங்கள்!
எது வரை என்று பார்ப்போம்.
எத்தனை முறை என்று எண்ணுவோம்.

இது
பண்டார வன்னியன்
பாதம் பட்ட மண்
பகையிடம் பணியாது.

இரணைமடு வான் பாயும் வல்லமையை
ஒரு போதும் இழக்காது!

வயலோடு முகிலிறங்கி
வளம் கொழிக்கும்.
அழகான
தெருவெல்லாம் தேரோடும்.
நம்பிக்கை நாள் தோறும்
பூப் பூக்கும்.

மீண்டும் இங்கே வசந்தம் விரியும்.
தமிழ் ஈழம்
ஆளாகிப் புதிதுடுத்து
அழகள்ளிச் சொரியும்.

இனி வாற ஆடி அமாவாசைக்கு
பாலாவியில தீத்தம் ஆடுவம்
எனும் நம்பிக்கை நமக்கிருக்கு.

கோணமலை நாளை
கொடியேறக் காத்திருக்கு…

சந்திவெளியும் கதிரவெளியும்
எமை ஆரத்தழுவி
ஆனந்தக் கூத்தாடும்
அவா கொண்டிருக்கு…

நீர்வேலியும் நிலாவரையும்
வாரி இறைக்க வரம் வேண்டி
தவமிருக்கு…

இதோ!
இப்போ!
அருகில் செல்வந்து விழும் சத்தம்
காதைப் பிளக்கிறது.

குண்டுச் சிதறல் வந்து
கூரையில் விழுகிறது.

ஆயினும்
பால் நிலவேறும் அழகள்ளி
பருகிவிட்டுத் தான் படுக்கைக்குப்
போகின்றேன்.

போர் தான் வாழ்வென்றான பின்பு
இதற்கெல்லாம் அஞ்சும் எண்ணம்
துளிகூட எனக்கு இல்லை…

உங்களுக்கு?

அஞ்சற்க!
எங்கள் நட்சத்திரங்களோடு
பேசிய நம்பிக்கையில் தான்
சொல்கின்றேன்.
விடுதலைப் பெருநாள் குறிக்கப்பட்டுவிட்டது!

எஞ்சிய நாட்கள் விரைவாய் கரைய
தொடர்ந்து நடவுங்கள்.
உங்கள் கடமையை கையிலெடுத்தபடி…



விடிகாலை விடியாத
அதிகாலைப் பொழுதொன்றில்

அந்த நெட்டூரம் நிகழ்ந்தேற
நெடுந்தூரம் நடந்தோம்.

நெடு நாளாய் வாழ்ந்திருந்த
ஊர் பிரிந்தோம்.

இது நாளாய் நாம் வாழ்ந்த
வாழ்விழந்தோம்.

கால்கள் போனதிசையில்
காடு மேடெல்லாம்
நாம் நடந்தோம்.

மேனி சோர்ந்து
வீழும் நிலையில்
இன்னுமொரு ஊர் சேர்ந்தோம்.

வெயிலுக்கு நிழல் தந்த
வாகை மரமொன்று
எங்கள் வீடானது.

தொண்டு நிறுவனம்
கொண்டு தந்ததில்
ஒரு குடிசை செய்தோம்.

இழந்த நாட்களின் இனிமையை
நெஞ்சுக்குள் பொத்தியபடி

வாழும் நாட்களின் வலிகள்
விழிகளில் நிறைந்து
உவர் நீராய் வழிந்தபடி

போர்க் கோலத்தில்
புதிதாய் ஒரு வாழ்வு
வேம்பின் சாறாய் கசக்கிறது.

காட்டு முற்றம்
எங்கள் வீட்டின் அறையானது.

ஓட்டைக் குடிசையினூடு
கொட்டும் மழை
முற்றும் உள்ளே நுழைந்து
வருகிறது.

எங்கள் வீட்டு வாசலில்
சோகம் வெள்ளம் போடுகிறது.

வெறும் சோற்றுக் கோப்பையை
கண்ணீர் தாரை தாரையாய்
நிறைக்கிறது.

வெற்று வயிறு வேக
நினைவு நெருப்பாய் எரிந்தபடி
செத்துப் போகும் நிலையில்
இப்போது நாங்கள்

என்றபடி
ஒன்று இரண்டல்ல
ஓராயிரம் குரல்கள்
உள்ளிருந்து ஒலித்தபடி

தினம் துயர் எடுத்து நுகரும் வாழ்வு
உயிர் விலை எடுத்தபடி
நகரும் நாட்கள்

ஒரு துளி பருகவாவது
அவன் தாய் முலை சுரக்க
அங்கேதும் இல்லாமல்
ஒரு குழந்தை

ஒரு பிடி அரிசி போட்டாவது
உலையேற்றும் ஆசை
அவன் உயிர் பிரியும் வரை
நிறை வேறாது போக
கதறும் அதன் தாய்

இப்படி ஒன்று இரண்டல்ல
பல நூறு கதைகள்

இது தான் வாழ்வெனில்
எது நாள் வரை சுமப்பது
நம் உறவுகள்?

இன்னும் எத்தனை
சின்ன விழிகளை
நாம் இழப்பது?

அவன் சுடு குழல் கொண்டும்
பொருள் தடை கொண்டும் வதைத்திட
நாம் சும்மா பார்த்துக் கிடப்பதா?

உலகெல்லாம் உணவுகொடுப்போர்
அங்கே உண்ண ஏதும் தராமலே
போகின்றார் பாருங்கள் வெளியே

வெறும் தண்ணீர் மட்டும் மென்று
சாவைத் தவிர்க்க முடியலையே!

சோகம் சொல்லி அழுதிட
இனிக் கண்ணீர் கூட
அங்கு இல்லையே!

உறவென்று சொல்ல
உரிமையுடன் கேட்க
நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்

உறவுகளே!
பல கடைசி மூச்சுக்கள்
இன்னும் இருப்பது
உங்களை மட்டும் நம்பியே
வாழ்வளிக்கும் தெய்வங்களே!
வரமாய் போடுங்கள்
உயிர் காக்க..!





நாளொரு பொழுதாய்
நடைமுறை உலகை
நானும் அவளும்
காணப் புறப்பட்டோம்.
நல்ல நண்பர்களாய்…

ஒரு நாள்…

நிலவை ரசிக்க நினைத்தோம்.
ஆனால்..
இரவுவரை தனித்திருக்கும்
தைரியம் நமக்கிருக்கவில்லை.

நிலவு வரும் வரை நாமிருக்க
நம் கலாச்சார கண்களும்
நம்மை விட்டுவைக்கவில்லை.

இன்னொரு நாள்…

கடற்கரை சென்று
காலாற நடந்து
காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…
நம் கைகளைக் கோர்த்தபடி
காலடி பதித்து
அலை நுரை ரசிக்க முடியவில்லை.

அவள் தடுமாறி
அலைக்குள் விழுந்த போதும்
என்னால் அவளை
அணைக்க முடியவில்லை.
கடலோ அவளை நனைத்துப் போனது.

மூழ்கப் போனவளை
மீட்டு வந்தது கண்டும்
எங்களுக்குள் ஊடல் என்று
ஊர் சொன்னது.

அலை கூட அப்போது
நுரை நுரையாய் சிரித்தது.
காற்றும் ஏதோ
கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.

மழை நாளொன்றில்..
ஒரு குடைக்குள் எங்களால்
நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க
எங்களில் ஒருவர்
மழையில்
நனைய வேண்டியதாயிற்று.

அப்போதெல்லாம்
நட்பு அழுதது.
ஊரோ
துளித்துளியாய் சிரித்தது.

எத்தனையை சுமந்து
நட்பைக் காத்த போதும்

அவன் வாசல்ப் படி வரைக்குமே
என்னால் பயணிக்க முடிகிறது
நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி

நட்சத்திரங்களை எண்ணியபோது
அருந்ததி வெள்ளி காட்டுவதாய்
சொன்னார்கள்

அவள் காலில்
முள் எடுத்த போது
மெட்டி மாட்டுவதாய்
சொன்னார்;கள்.

இத்தனைக்குப் பின்னும்
எங்கள் நட்பு
செத்துப் போகவில்லை.
உள்ளமும் கெட்டுப் போகவில்லை.

ஆனால்
எனக்கு
மணமகள் பார்த்த போதும்
அவளுக்கு
மணமகன் பார்த்த போதும்

சில வாய்கள் சொன்னதை
எங்கள் செவிகள் கேட்டபோது
ஆறாம் அறிவு
கொஞ்சம் சிந்தித்தது

நட்பை ஏற்காத உலகில்
என்றும் நண்பர்களாய்
வாழ நினைத்ததால்..

அவளுக்கு
இப்போது வாய்க்கட்டு
எனக்கு
இப்போது கால்க்கட்டு
நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது
எனக்கும் அவளுக்கும் இடையில்
எப்போதும்....





சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்

சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்

காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்

தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்

மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்

மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்

மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்

மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்

கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்

சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்

என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்

காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்

என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்

விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்

நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?



ரம்பை ஊர்வசி
சொல்லத்தான் கேட்டேன்.
மேனகை உன்னை
கண்களால் காண்கிறேன்.

இந்திரலோகம் இறங்கி வந்து
இங்குற்றாயா பெண்ணே!

இல்லை
இந்திரலோகம் மிஞ்சிடும் பெண்ணாய்
இங்குதான் பிறந்தாயா
கண்ணே!

எங்கு தான் வாழ்ந்தாய்?
இத்தனை நாளாய்..

ஏங்குதே நெஞ்சம்
நாளொரு பொழுதாய்..

நிலை மீறி ஆடும் கண்கள்
நிஜமாக இல்லை
உன்னை விஞ்ச வேறு பெண்கள்

உன்னைக் கண்கொள்ளக் காணத
கண்ணென்ன கண்ணோ!

நீ நெஞ்சள்ளிப் போகாத
நெஞ்சங்கள் உண்டோ?

உன் கன்னக்குழி அழகில்
காணாமல் போகாதார் உண்டோ?

உன் சின்னச் சிரிப்புச் சிறையில்
சிக்கிச் சிறைப்படாதார் உண்டோ?

இல்லையென்று சொல்கின்ற இடையில்
வேறு பெண்ணே இல்லை!

இனி யாரும் பிறந்தால்
அது நம் பிள்ளை!

வெண்ணிலவின் தங்கை என்று
உன்னை நான் அழைக்கவா?

உன்னைத் தொட்டுத்தொடரும் சொந்தம்
நான் என்று சொல்லி வைக்கவா?


ஐந்தொழில் புரியும்
வல்லமை கொண்டவளே!

உன் அங்கங்கள் கொண்டு
அத்தனையும் விளக்கி
ஆடி முடி!

இங்கு
ஆடிக்கொண்டிருப்பவர்கள்
அத்தனைபேரும் அடங்கும் வரை..



ஏய்!
முணு முணுக்கும் வாய்களே!
கொஞ்சம் நிறுத்துங்கள்.

படலைக்கு உள்ளே
தெருநாய் வருவதால்
உன் முற்றம் தொலையுதென்று
எவன் சொன்னான்?

தெருக்கள் எங்கும் நீ
கை வீசி நடக்கணும்.

உன் இருப்பை எப்போதும்
உறுதி செய்யணும்.
உண்மைதான்

உருப்படியாய்
என்ன செய்தாய் இதற்கு?

ஊருக்கு சொல்ல
உன்னிடம் நிறைய உண்டாயினும்
உன்னிடம் சொல்ல
ஏதேனும் உண்டாவென
உன் மனச்சாட்சியைக் கேள்

ஆமெனில்..

நீ கரைவதை தொடர்
ஆயினும்
சில வார்த்தைகளைத் தவிர்
அதைப் பின் காலம் சொல்லும்

இல்லையெனில்..

இனியாவது
சிந்தனைகொள்

மானிடப் பேரவலம் கண்டாவது
உன் மனக்கதவு திறக்கட்டும்

இரும்புச் சிறையுடைத்து
புது மனிதனாய் வெளியே வா!
விடுதலை பற்றி
அப்போது கதைப்போம்

நசிக்கப்பட்ட குரல்வளைகளே
உரிமைக் குரலை
உரத்தொலிக்கும் போது

சில திறந்த குரல்கள் மட்டும்
ஏனிங்கு மௌனித்து கிடக்கின்றன

தெருக்கள் களவு போகும் போதும்
நல்ல உறக்கம் எப்படி உனக்கு வருகிறது

வெறும் கொள்ளி வைக்க மட்டும் தானா
அன்னை பெற்றாள் நம்மை

அன்னை மண் காப்பதை
பிள்ளையன்றி யார் செய்வார்?
அடுத்தவன் வருவானோ சொல்?

நம்பிக்கைச் சிறகு நமக்கிருந்தால் தானே
சிகரத்தை நோக்கி உயரப் பறக்க முடியும்

கூரை ஏறவே சிறகு வலித்தால்
வானாய் விரிந்த சுதந்திரத்தை
எப்படி உன்னால் அனுபவிக்க முடியும்

அண்ணனை நெஞ்சில் எண்ணிடும் நெஞ்சங்கள்
அஞ்சி வாழுதல் முறையோ சொல்லுங்கள்

மண்ணினில் ஆயிரம் மறவரை விதைத்த நாம்
பகையிடம் மண்டியிட்டுப் போவோமா சொல்லுங்கள்

எங்கள் தம்பிகள் தங்கைகள் செய்திடும் போருக்கு
உரமாய் இருக்க எதையோ செய்யுங்கள்

ஆயிரம் போரினில் நாங்கள் தோற்றாலும்
இலட்சியப் போரினில் வெல்வதுதான் நம் இலக்கு

விடுதலைத் தீயது அணையாது

நெஞ்சு நிமிர்த்தி நில்லுங்கள்
வாழ்வா சாவா வரட்டும் பார்ப்போம்


தமிழா!
இது விடுதலைப் பயணம்
வேறு வழியின்றிப் போனதால்
தெரிந்து தான் குதித்தோம்

ஏதிரியை எதிர்ப்பதும்
அவன் தரும் வலியினைச் சுமப்பதும்
இறுதியில் வெற்றி பெறுவதும்
நாங்களாய் தான் இருக்கணும்

இதை விதியென்று சொல்லாதே
இது தான் வாழ்வென்று சொல்லிடவே
எங்கள் வரலாறு விரும்புகிறது.

துயரம் இமயமாய் உயர்ந்தாலும்
விடுதலைப் பறவைகளுக்கு
எப்போதும்
வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான்

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள் உமதாகட்டும்
நாளைய பொழுது நமதாகும்



கோடி உயிர்களில்
ஊறி வழியும்
காதல் ஒன்று
காட்சியில் நுழைகின்றது.

தேடித் தேடி
தொலைந்து போகும்
தேடலாகி
புதுக் காவியம் வரைகின்றது.

யுகங்கள் மாறி
உலகம் சுருங்கி
உள்ளங் கையில் சுழன்றாலும்

இதயம் நுழைந்த
உறவின்
வருகை நினைந்து
நகரும் நாட்கள்
யுகம் போல் தெரிகின்றது.

கால வெளியில்
நடையாய் நடந்து
கால்கள் வலிக்கிறது.
நாட்கள் மட்டும்
நகர மறுக்கிறது.

என் உறவைச் சுமக்கும்
இரும்புப் பறவை
இத் தேசம் வரும்நாள்
இன்றாய் மாறாதா?

அத் திருநாள் காண
கழியும் பொழுதெல்லாம்
நானே சேமிக்க..

காத்திருப்பு என்னவோ
இன்னும் கனதியாய்
இன்னும் இன்னும் நீளமாய்…

காத்திருத்தல் என்பது

ஒரு கடற்கரையிலோ
குளக்கரையிலோ
அல்லாமல்
விமான நிலையத்தில் என்பதால்

இதயம் இன்னும்
விரைவாய் அடிக்கிறது.
அந்த வானின் உயரம்
சென்று பார்க்க
துடியாய்த் துடிக்கிறது



எங்கோ பார்த்தேன்
அங்கே தொலைந்தேன்
என்பேனே
அது இவளைத்தான்

என்றோ பார்த்தேன்
அன்றே தொடர்ந்தேன்
என்பேனே
அது இவள் காலடித்தடம் தான்

நான் மெல்லிசை ரசித்த
முதல் பொழுதொன்று
சொல்வேனே
அது பிறந்தது
இவள் கொலுசில் இருந்துதான்

நான் தினம் தினம் இசைத்திடும்
பல்லவி இருக்கிறதே
அது பிறந்தது
இவள் மொனத்தில் இருந்துதான்

சூரிய தேவன் ஏவிய கதிராய்
எனைச் சுட்டெரித்த
கதை சொல்வேனே
அது
இந்தக் கண்கள் தான்

வண்டுக்கு மலர்ந்த
வாசமலரையெல்லாம்
சூடிக்கொள்ளும் வசியக்காரி
என்பேனே
அவள் இவள்தான்

உன் புன்னகை என்பது
என்ன விலை என
எனைப் பிறர் கேட்பதெல்லாம்
இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான்

அப்பாவிய் நான் அன்று
அழுது புரண்ட கதை ஒன்று சொல்வேனே
அப்போது
எனை அடித்துச் சென்றவள் இவள் தான்

காவலர்களே!
இவளைப்
பிடித்துச் சிறையில் அடையுங்கள்

நானிருக்கும் பைத்தியக்காரச்
சிறையிலல்ல

வெளியில்
எங்கும் எரிகிறதே
தீ
அதை மூட்டிவிட்டு
உள்ளிருக்கும்
காதல்த்
தீவிர வாதிகளுடன்.




பச்சைக் குழந்தை அங்கே
பாலுக்கு அழுதிருக்க
பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்
என்னைக் கடவுளென்று
மனிதன் வணங்குவானோ சொல்?

சத்தியமாய்
அந்தக் கல்லுக்குள்ளே
நான் இல்லையெடா!

மானிடா!
நான் கருணையுள்ளவன்.
ஏழை நெஞ்சுக்குள் தான்
எப்போதும் இருப்பேனடா!

உன் இரத்த உறவுக்கங்கே
பாதி உயிர் போகையிலே
எப்படி நான் கொலுவிருப்பேன்?
நீயமைத்த மஞ்சத்திலே!

எப்போதடா நான் கேட்டேன்?
இப்போது நீ எனக்கென்று
செய்வதெல்லாம்..

வானமே கூரையாய் உன் உறவு
வாழ்வுக்கு வரமிருக்க
கோபுரக் கோயில் கட்டி
என்னை குடியிருக்க நீ கேட்டால்
எப்படி இருப்பேனடா சொல்?

அப்படி நான் இருந்தால்
மனிதன் வணங்கும் தெய்வம்
எனும் தகுதி
எனக்கிருக்குமோ சொல்?

மானிடா!
நான் கடவுள் எனும் பெயரில்
அந்தக் குடிலில்
குடியிருக்க வேண்டுமடா!
என் கடமை செய்து
கண்ணயர வேண்டுமடா!

உன்னைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.
கோடியில் கோயில் கட்டி
அழைத்தென்னைப்
பழிகாரன் ஆக்காதே!
நீயும் பெரும் பாவம் செய்யாதே!


சத்தியமாய் சொல்கின்றேன்
இப்போது
அங்குவர என்னால் முடியாது.

உள்ளம் கோயில் என்றும்
அன்பே தெய்வமென்றும்
எத்தனை முறையடா சொல்வது!

இனி எப்படியெடா?
உனக்கு உரைப்பது
என் பொருளை..

ஏதோ
என்னைத் தேடி வருவதாய்
சொல்லி
தூரவே போகின்றாய்.

வேண்டுதல் என்றெண்ணி
வீண் விரயம் செய்கின்றாய்.

எனக்கு விழா என்று
உனக்கே விழா எடுக்கின்றாய்.

எனக்கு படைப்பதாய் சொல்லி
நீயே தின்கின்றாய்.

ஏழை பசியிருக்க
ஏப்பம் விடுகின்றாய்.

பெயருக்கும் புகழுக்கும்
பெரும் பணம் இறைத்துப் பின்
கொலரை எடுத்துவிடும்
நீயெல்லாம்…?

எப்படி இருக்கலாம்
என் பக்தனாய்?

எப்படி நான் உண்பேன்
உன் பாவச் சோற்றை

யாருக்கு நான் உரைப்பேன்
உன் ஈனச் செயலை

உண்மையில்
நான் உண்டு உறங்கி
ரொம்ப நாளச்சு
அந்த ஏழைகளைப்போல்..

தயவு செய்து
என் நிலையை நீ
கொஞ்சம் புரிந்து கொள்
மானிடா!

நான் கண்ணீர் வடிப்பதை
இனியாவது கண்டுகொள்
மானிடா!

எப்படி எப்படியோ என்னை வைத்து
பிழையாய் நீ பிழைக்க
என்ன பாவம் நான் செய்தேன்
அணு அணுவாய் நான் இறக்க
அந்த ஏழைகளைப்போல்

மானிடா!
ஓன்று மட்டும் கேள்
நிச்சயமாக
நீ திருந்தும் போது
நீயின்று வேண்டும் வடிவில்
நான் இருக்க மாட்டேன்.

ஒன்றில் இறந்திருப்பேன்
இல்லை
அன்பென்ற வடிவில் உறைந்திருப்பேன்.

தயவு செய்து முயற்சி செய்
என்னை முழுதாய்க் கொல்ல
அல்லது
அன்பென்ற வடிவில்
என்னை எப்போதும் காண

அது வரை
நான் ஏதும் தவறுரைத்தால்
என்னை மன்னித்து விடு
இல்லை தண்டித்து விடு
வழமை போல

இப்படிக்கு
உண்மையுடன்
உங்கள் கடவுள்
அன்பே தெய்வம்



நேற்று
என்றொரு பொழுது
இன்று போலுள்ளது
என் நினைவில்

நீல வானம்
ரொம்ப தொலைவில்
காற்றுக்கூட
அன்று ஓய்வு
நிசப்தம் எங்கும்
நிரம்பி வழிய
நீள நடந்தேன்
என் வழியில்

பட்டுடுத்தி ஒரு
பட்டாம் பூச்சி
சிறகடித்தென் முன்
பறந்து போக

புயலடித்துப் போனதென்
மனதுக்குள்
நான் சிறகடித்துப் பறந்தேன்
அந்த
வானின் உயரத்தில்

இதயம் மட்டும்
சிறைப்பட்டது
அந்த சிறகுக்குள்



ஓ!
என் உறவுகளே!
ஒரு மரத்துப் பறவைகளே!

ஏக்கமே வாழ்வாய்
வானமே கூரையாய்

ஆன திசை முழுதும்
தணல் அள்ளி எரித்து நிற்க

கால நதி வெள்ளத்தில்
கரை ஒதுங்கிய சருகுகளாய்

நேற்றிருந்த வாழ்வு தொலைத்து
நீண்டு நெடிய பயணத்தில்
நிர்க்கதி நிலையில்
கானகத்தின் வாசல்களில் இருந்தபடி

உள்ளிருந்து உங்கள் குரல்
உலகின் திசைகளை நோக்கி

என்ன பாவம் நீர் செய்தீர்
வழமை போல்
யாரிற்குமே கேட்கவில்லை
இம்முறையும்

இரத்தோட்டம் மட்டும் இருந்தால் போதாது
சற்று ஈரம் நொதித்தால் தான்
அது இதயம்

நாம் வாழ்வதோ
இதயங்கள் அரிதான உலகத்தில்

பகுத்தறிவு செத்தவனை
மனிதன் என்று எவன் சொல்வான்

நாம் வாழ்வதோ
மிருகங்கள் நிறைந்த பூமியில்

ஈகை இருந்தால் தான் அது மனிதம்
இல்லையெனில்
அது
நடக்கும் நடக்கும் என்று
நாளைக்கடத்தும்
நடக்கும் பிணம்


நாம் வாழ்வதோ
பிணங்கள் நிறைந்த யுகத்தில்


உறவுகளே!
அம்மா உள்ளே பசித்திருக்க
வெளியே அன்னதானம் கொடுக்கும்
இதயம் படைத்தவன் நானல்ல

என் அன்னை மண் வாசம்
அதுவுமல்ல

என்னை அப்படி
என் அன்னை வளர்க்கவும் இல்லை

மன்னித்து விடுங்கள்
உறவுகளே!

இன்றிரவு
சிலதுளி கண்ணீர் மட்டுமே
உங்களிற்காக என்னிடம்..

நாளைய பொழுது விடியட்டும்
என் வியர்வை சொட்டும்
வெள்ளிப் பணம் சேர்த்து
உங்கள் வாசல் சேர
நான் உழைப்பேன்

அதுவரை
உங்களுடன் நான்

உண்ணாமல் உறங்காமல்
உள்ளத்தில்
உறவினை சுமந்தபடி



என்றோ?
ஆரம்பித்து விட்டேன்.
என் பயணத்தை..

பல தேசங்களின்
எல்லைகள் தாண்டி
எங்கோ?
சென்று கொண்டிருக்கின்றேன்.

எப்போது போவாய்?
என்று
ஏசுவோரை கடந்து..

எப்போது வருவாய்?
என்று
ஏங்குவோரின் வாசலில்
இப்போது நான்.

என் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒரு கூட்டம் தெரிகின்றது.

அதோ!
அதில்
ஒருத்தி

உறவையெல்லாம்
பிரிந்து வந்து
உள்ளத்தில்
கனவுகள் சுமந்தபடி
வெற்றுக் குடத்தோடு
வெயில் கொல்லும்
காலப் பெரு வெளியில்
கால் கடுக்க
காத்து நிற்கின்றாள்.
என் வருகைக்காக..

இதோ!
அவளின்
காலடித் திடலில்
இப்போது நான்..

நன்று
உண்டு
உடுத்து
உறங்கி
நாளாச்சு என்பது
நன்றாய் தெரிகின்றது.

என்னால்
என்ன செய்ய முடியும்?
இப்போது அவளுக்காக..

என்
உதிரமோ
வியர்வையோ கொடுக்து
அவள் தாகமாவது தீர்க்க
ஏங்குகின்றேன்.

ஆனாலும்..

ஒரு கணம் நின்று
சில வார்த்தை பேசி
என்னிடம் உள்ளதை
அவள் குடம் கொள்ள
என்னால்
அள்ளிக் கொடுக்க முடியாமல்
எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
சரிவை நோக்கி..

அவளோ
ஏக்கத்துடன்
என்னைப்பார்த்தபடி
சற்று தள்ளியே நிற்கின்றாள்
தன் கால்களைக்கூட
நான் தொட்டு
வருந்தியழுது விட்டுப்போக
முடியாத தூரத்திரல்.....



மலரே!
தென்றல் தேடிய
முகவரி நீ.
முகவரி மாறிய
தென்றலின்
முதல் வரியும் நீ.

தென்றல் தீண்டிட
நீ மலர்ந்தாய்.
தென்றல் உன்னைத்
தொட்ட போது
நீ நிலை தடுமாறினாய்.

தென்றல் சுமந்த நீரால்
நீ நனைந்தாய்.
தென்றல் உன்னை
அணைத்தபோது
நீ ஏனோ
தலை குனிந்தாய்.

மழை கழுவிய
மலரே
உன் வாசம் போனதாய்
வருந்தாதே
வாழ்வு முடிந்ததாய்
புலம்பாதே

மலர் தழுவிய என்னில்
சுவாசமாய்
உன் வாசம்

இன்று நான் மண்னோடு
உன் வாசம் மீண்டும் காற்றோடு

நாளை நீ என்னோடு
உன் வாசம் அதே காற்றோடு

கலங்காதே!
உனக்கும் எனக்கும் மட்டுமல்ல
உலகிற்கே இதுதான் நியதி.


அதிகாலை இதுவென்று
விடிவெள்ளி
சொன்ன பின்பும்

சேவல் விழித்து
சோம்பல் முறித்து
காலை விடிந்ததென்று
கூவிய பின்பும்

கோபுரத் திசையிருந்து
கோயில் மணி ஒலித்து
கும்பிட வாருங்கள்
ஏன்றழைத்த பின்பும்

சூரியன் எழுந்து
இருளைச் சலவை செய்ய
வானம் வெளுத்த பின்பும்

புல்லில் தூங்கிய
பனிக்கூட்டமெல்லாம்
மண்ணுக்குள் நுழைந்து
வேரோடுறவாடச்
சென்ற பின்பும்

மொட்டுக்கள் மலர்ந்து
வண்ணங்கள் தெளித்து
விடிகாலைப் பொழுதொன்றை
வரவேற்ற பின்பும்

அதிகாலைத் தென்றல் வந்து
காலை வணக்கம்
சொல்லி என்னை
ஆரத்தழுவிய பின்பும்

எனக்கு ஏனோ விடியவில்லை

ஏனெனில்
என் தாவணிப் பூ
இன்னும் பூக்கவில்லை
என் கண்களில்

என் காதல் தெய்வம்
இன்னும் எனக்கு
தரிசனம் தரவில்லை

ஆதலால் எனக்கு
இன்னும் விடியவில்லை


கண்கள் பேசிக்கொண்டன
அது காதல் பரிபாசை

இதயம் இடம் மாறியது
அது காதல் சம்பிரதாயம்

மௌனங்கள் பேசிக்கொண்டன
அது காதல் மொழி

வார்த்தைகள் பேச முனைந்தன
ஆனால்
சொற்கள் தொலைந்து போயின

ஆனாலும்
காகிதம் போட்டிட
முகவரி கிடைத்தது
எஞ்சிய வார்த்தைகளில்

மின்னஞ்சல்;;…
நவீன காதல் தூது

உள்ளத்தில் இருந்ததை
உள்ளபடி சுமந்தது

என் உள்ளடக்கத்தில் இருந்தது
உனக்கான காதல் கடிதம்

உன் உள்ளடக்கத்தில் இருந்தது
உலகறியா புது மொழி

எந்தக் காதலனும் கண்டிடாத
புது வார்த்தை

சொல்லிவிடு அன்பே
என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்



நிலவு காயும் நேரம்
என் நெஞ்சுக்குள்ளே ஈரம்.

இரவு தூங்கும் நேரம்
என் இதயம் முழுதும் ஏக்கம்.

இமைகள் மூடா விழிகள்
அழுது வடிக்கும் சோகம்.

இளைய மனதின் நிலையை
வெண்ணிலவே அறிவாள் காண்.

அன்னை மடியின் ஆறுதல்
அவளின் வருகை தருமே!

அவள் அன்பு மொழிப் பேச்சு
எனைத் தூங்க வைக்கும் தாலாட்டு!

அவள் வீசும் ஒளியில்
என் இரவு வெளிச்சம் பெறுமே!

அவள் தூங்கும் பொழுது
என் இரவும் தூங்கி விடுதே!

மீண்டும் பகல் வந்து தொடவே
என் பயணம் நீண்டு தொடர..

இதோ வந்து விட்டார்கள்!
பகல் பொழுதின் பொய் மனிதர்கள்.

கடவுளே!
எப்போது முடியும்
அமைதி கலைக்கும் இந்தப் பகல்கள்?

இப்போதே வராதா?
அந்த வெண்ணிலவின் இரவு

அமைதியாக நான் அழ..
உண்மையுடன் நான் உரையாட..
உறுதியுடன் என் பயணம் தொடர..



எங்கிருந்தோ பிறந்து
வான் மீது வலம் வந்து
காற்றோடி போராடி
கார் முகிலாய் கவிந்து

குளிர்ந்து
உருகி
குட்டித் துளிகளாய்
புறப்பட்டு..

என்னை நனைத்தது.
நான் ரசித்த
பூவை நனைத்தது.
நிமிர்ந்து நிற்கும்
புல்லை நனைத்தது..

நான் பேசும் தமிழ்
அதில் நனைந்தபோது…

என் பாதச்சுவடுகள் பற்றி
முத்தமிட்டது.
சிதறிப் போயொரு
சத்தம் செய்தது.

அது சங்கீதம் அல்ல!
என் உறவுகளின் அவலம்!

அப்படியானால்?
இது
மழைத்துளி அல்ல.

இந்து சமுத்திரம்
கடந்து வந்த
கண்ணீர்த்துளி.




உணர்வுகளை உண்மைகளை
உரைக்க வேண்டும்.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லவேண்டும்.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லவேண்டும்.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
இன்றைக்காவது சொல்லவேண்டும்.

வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
சில வார்த்தைகளை என்னால்
இதுவரை பிரசவிக்கவே முடியவில்லை.

ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
என்னுள் நிறைந்து வழியும்
மானுட உணர்வுகள்
வெளியே தெரிய
நிறையவே பேசவேண்டும்

குறைப் பிரசவமாய்
வந்து விழும் வார்த்தைகள்
முழுமை பெற வேண்டும்.

பேச வேண்டும்
நிறையவே பேசவேண்டும்

ஆசை ஆசையாய்
அழகு தமிழில்
நிறையவே பேசவேண்டும்.

பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்.

ஆனால் இப்போது
வார்த்தைகள் வெளியே வரவில்லை

அப்படியானால்
இனி எப்போது பேசுவது?
இதுதான் என் வாழ்வின்
இறுதி நிமிடமாயிற்றே!

ஆவி பிரிய துடிக்கும்
அந்த நிமிடமும் கரைகிறதே…

என்னுடன் சேர்ந்து
என் வார்த்தைகளும்
மரணித்துப் போகிறதே…



என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.

உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.

எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்

விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?

வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?

எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்

என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.

விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்

எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
இன்னும் இறவாத
பறவை நான்


சோகம்!
நான் காணும் உலகில்…
கழியும் ஒவ்வொரு வினாடிகளில்…
சோகம் என்பது
நிறைந்து உறைந்திருக்கின்றது.

காண்பவை
காணாதவை
கேட்பவை
கேட்காதவை

அத்தனையிலும்
உயிரோடியிருக்கும்
எப்போதும் உயிருள்ள
உயிர்கொல்லும் பொருளாய்
உருவெடுத்திருக்கின்றது.

நான் சுமப்பவை
பிறர் சுமப்பவை
என நீண்டு செல்கின்றது
முடிவிலி வரை.

அத்தனையும் மொத்தமாய்
என்னைச் சுற்றிக் கொல்(ள்)கின்றது.

எதற்காக அழுவது?
எத்தனை முறை அழுவது?

இந்தச் சொட்டுக் கண்ணீர் போதவில்லை
என் சோகம் சொல்லி அழுது வடிக்க.

கடவுளே!
எனக்கு வரமேதும் தரும் எண்ணம்
உனக்கிருந்தால்?

கடல் அளவு கண்ணீர் கொடு.
அத்தனை சோகத்திற்கும் சேர்த்து
மொத்தமாய் அழுது முடிக்க.

குறைந்த பட்சம்
குளமளவாவது கொடு

வழமையாய் நீ தரும்
குறை வரம் போல



என் முற்றத்து மல்லிகையே!

எப்போது கலைப்பாய்
உன் மௌனம்?

எப்போது உதிர்ப்பாய்
உன் வார்த்தை?

ஒரு முறை தனியே வா
என் அருகில்..

வெண்ணிலவு துணையிருக்க
நான் உன்னிடம் பேசவேண்டும்

யாரிடமும் சொல்லாத ஒன்றை
உனக்குமட்டும் சொல்ல வேண்டும்

சொல்லிவிடு அன்பே!
எப்போது வருவாய்?



அந்தி மங்கிய அஸ்தமனப் பொழுதொன்றில்
மந்தி மனதாய் மரக்கிளை தாவிட
வந்து போகும் நினைவுகளோடு
பஞ்சு மெத்தை மேலே படர்ந்து
எங்கோ சென்றிட எண்ணம் கொண்டேன்.

தாயே நீயே தஞ்சம் என்று
தலையணை எடுத்து
தலைக்கொன்று கொடுத்து
இன்னொன்றை எடுத்து
இறுக அணைத்தபடி
கண்களை மூடிக்கொண்டேன்.

கண்ணெதிரே ஒருத்தி
கனவா? நினைவா? தெரியவில்லை.
நிஜமா? நிழலா? புரியவில்லை.
காற்றடைத்துக் கதவடைத்த அறைக்குள்ளே
ஓசை படாமல் எப்படி வந்தாள்?
இறுக மூடிய கண்களுக்குள்ளே
இவள் எப்படி நுழைந்தாள்?

அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டேன்.
அடுத்த கேள்வி கேட்கு முன்னே
அவள் வாய் திறந்தாள்
தமிழ் மொழிந்தாள்
தாய் மொழிக்கு தலைசாய்த்து
அவள் வாய் மொழிக்கு
செவி சாய்த்தேன்.

புரிகிறது எனக்கு
உன் புலம்பல்
என்று தொடர்ந்தாள்

எங்கும் வருவேன்!
எதிலும் வருவேன்!
இன்பம் துன்பம்
இரண்டிலும் இருப்பேன்.
இறுதி வரைக்கும் கூடவே இருப்பேன்.
உன்னையும் என்னையும்
பிரிக்கவே முடியாது!

அடிக்க அணைக்க என்னால் முடியும்!
அடுத்த வார்த்தை பேசாதே!
என்று தொடர்ந்தாள்
உரிமையோடு..

விலங்கு போட்ட என் கைகளைப் பார்!
அழுது புலம்பும் அவலச்சத்தத்தைக் கேள்!

முள் சுமக்கும் என் முற்றத்தைப்பார்!
பிஞ்சும் பூவும் துண்டாய் சிதையும்
துயரத்தைப் பார்!

அஞ்சி வாழுதல் நமக்கு இழிவு.
அழுது புலம்புதல் அதனிலும் கேடு.
நம்பி நடத்தல் நாகரிகம்.
நம்ப நடத்தலும் நாகரிகம்.

இருப்பினும்..

நம்பிக்கெட்டிட நம்மால் முடியாது.
கெஞ்சிக் கேட்பதும் கேவலம்.
கேட்டுப் பெறுவதும் நடக்காது.

போட்டுப் பிடித்தால் தான்
புரியும் புலிக்குணம்.

தாமதம் வேண்டாம் இளையவனே
போர்வை விலக்கிப் புறப்படு.
புதிய பரணி எழுதிடு.
காலக் கடமை செய்திடு.
களம் நோக்கி காலெடுத்து நட.

சொல்லி மறைந்தனள்
சோதி மின்னலாய்

துள்ளி எழுந்தேன்
துயில் கலைத்து.
துணிவாய் நடந்தேன்
துயர் துடைக்க.
அணியில் சேர்ந்தேன்
ஆயிரத்தில் ஒருவனாய்.
பணியில் புகுந்தேன்
பகை விரட்டிட.
பலமாய் நிற்கின்றேன்
பகையின் முன்னால்.
சரியாய் செய்கின்றேன்
என் கடமை.

கட்டளை வருகின்றது காற்றினிலே
அழுத்தியை அழுத்துகின்றேன் நொடியினிலே
பகை அழியுதென் வெடியாலே
தாய் மண் விடியுதென் உயிராலே
அன்னை தெரிகின்றாள் என் கண்களுக்குள்
ஆனந்த சுதந்திரம் இதுவல்லோ!



துளியாய் சேர்ந்த
கடலில் பிறந்த
மழைத்துளி நான்.

இன்று
மேகமாய் அலைகின்றேன்
வானத்தின் வெளிகளில்

மண்ணில் வீழ்வதே
என் இலட்சியம்
மலரே
உன்னைக் காண முன்பு!

இன்று
உன்னில் விழவே
ஏங்குகின்றேன்.
மலரே
உன்னைக் கண்ட பின்பு

பூவே
என்னை
ஏந்திக் கொள்வாயா?
புன்னகை பூத்திருக்கும்
உன் இதழ்களில்…



தங்கம் தடவிய அங்கமடி
உயிர் தளும்பி வழியும் கவிதையடி
உன் அங்கம் அழகிய சிற்பமடி
என் தூக்கம் எங்கும்
உன் சொப்பணமே

இரவை பகலாய் தந்தவளே
என் இதயம் சலவை செய்தவளே
என் உள்ளம் என்னும் பள்ளத்தில்
நான் ஊற்றிக்கொண்ட உயர் மதுவே

தேடல் என்பதை தொடங்க முன்பே
ஓடி வந்து நுழைந்தவளே
கோடி மின்னல் பார்வைகளால்
பல சேதி சொன்ன பெண்மகளே

வட்டம் போட்ட கோட்டுக்குள்
இனியும் வாழ்ந்து தேய்ந்திட
முடியாது.

சுற்றம்
என்ன சொன்னாலும்
என் கால்கள் நடக்கும்
உன்னை நோக்கி

ஊரே கூடி எதிர்த்தாலும்
உன்னை சேரும் என் கரங்கள்

காலன் எதிரே வந்தாலும்
என் பயணம் தொடரும்
உன் திசையில்



அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!

நானொரு குழந்தை
நீயொரு குழந்தை

நாமொரு குடும்பம்
நமக்கொரு உலகம்

வாழ்வொரு பூந்தோட்டம்
தினம் தினம் கொண்டாட்டம்

நம் உறவுக்குப் பெயரில்லை
உள் அன்புக்கும் குறைவில்லை
என்பதாய் கடந்தன.
அன்றைய நாட்கள்..

எங்களுக்கு இறக்கை முளைக்க முன்பே
காலம் இறக்கை கட்டிப் பறந்தது.

மேகம் சிந்தும் துளிகளில் ஒன்றாய்
நானும்
இன்னொன்றாய்
நீயும்
எங்கெங்கோ சிதறிவிட்டோம்.

பருவங்கள் மாற
துருவங்கள் உருக
பகல்களும் இரவுகளும்
கடந்தோடிப் போக
இன்று
நீ ஒரு குமரி
நான் ஒரு குமரன்

உன் சின்ன வயதில்
நீ தந்த முத்தங்கள்
இன்று ஏனோ இனிக்கின்றன.

உன் சின்ன விழிப்பார்வை
இன்றும் மின்னல் வெட்டுகின்றது

நீ கெஞ்சும் மொழி கேட்க
என் நெஞ்சு ஏனோ துடிக்கின்றது

உன் வெட்கப் பூட்டும்
விளையாட்டு கோபமும்
வேண்டி நிற்கின்றேன்.

பெண் நால்வகைக் குணத்தை
உன் உருவில் காணத்துடிக்கின்றேன்.

உன் பிஞ்சு மன அன்பு
இன்னும் இருந்து என்னை ஏதோ செய்ய

உன்னில் ஏதோ எனக்குத் தோன்றி
உள்ளிருந்தபடி என்னைக் கொல்ல..

சகானாவின் உயரங்களில்
சகாராவின் வெளிகளில்

பனிக் காடுகளில்
பசுமைத் தேசங்களில்

என
என் தேடலும் தொடர்கிறது

தேசங்களும்
எல்லைகள் கடந்து
நீண்டு செல்கின்றன
நம் அன்பைப் போல்

அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!



பூவையென் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
வலியைத்தந்தன.

ஏனெனில்..
வாழ்வொரு
போராட்டம்.
அதில் தினம்
பல போர்க்களம்.

புலர்கின்ற பொழுதொன்றில்..
காலமே வந்து
புதிதொன்றைத்
தந்திட..,

என்னுள்
ஏனோ?
புயலடிக்கின்றது.
எண்ணத்தில் எல்லாம்
மின்குமிழ் சிரிக்கின்றது.
ஆன திசை முழுதும்
மணி அடிக்கின்றது.

இது எனக்குப் புதிது!
அய்யகோ!
என் செய்வேன் நான்?
இது இன்னொரு போர்க்களமா?
இங்கும் காண்பது போர்முனையா?

இதயம் திறந்து
இழையோடிய வார்த்தைகளை..
என் உள்ளம் குழைத்து
உயிரூட்டிய காகிதத்தை..
மின்னஞ்சல் செய்யாமல்
உன்னிடம் தருகின்றேன்.

வெள்ளைப்புறாவே!
இங்கே வா!

சில மனிதர் செய்வது போல்
இது
அரட்டைக்காதல் அல்ல.
இது
இதயம் கொடுத்து
இதயம் வாங்கும்
உண்மைக்காதல்.

காற்று வெளி நுழைந்து
வானவெளி கடந்து
காத தூரம் சென்று
எனக்கொரு அஞ்சல் செய்!
என் வாழ்வெனும்
பயணம் தொடர
அல்லது
வாழ்வுடன் போர் புரிய.



வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!

வல்லவனே வாழ்வான்
வரலாறு சொல்கிறது.

வெல்பவனே வாழ்வான்
வெளிப்படை உண்மை.

கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு
எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று

வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம்
பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம்

தர்மம் என்றொரு அடிப்படை உண்டு
தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு

வெற்றி என்றொறு மந்திரம் உண்டு
எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும்

இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்!
இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்!

அப்போது தான் நீ வாழ்வாய்!
என நிகழ்காலம்; சொல்லிநிற்கின்றது

காலத்தைக் கையிலெடு
கடமையை நெஞ்சிலெடு

நடப்பது என்னவென்று
நீ முதலில் தெளிவு கொள்

இனி என்ன நடக்கணுமோ
நீ அதற்கு தயாராயிரு

உன் பணி என்னவென்று
நீ முதலில் தெரிந்து கொள்

உன் பணி இதுவென்று
உன் உறவுக்குப் பின் சொல்லிக்கொடு

எல்லோரும் பணிசெய்தால்
தேச விடியல் விரைவு பெறும்

உரிமைக்குரல் உரத்தொலிக்கட்டும்
உரிமைப் போர்க்கது உரம் சேர்க்கட்டும்

வெல்வோம் நாமென உறுதியெடு
வெற்றி எம் பக்கம் வந்து விடும்

உரிமையை வென்றுவிட
களங்கள் விரியட்டும்

சோகத்தை மாற்றிவிட
போராட்டம் தொடரட்டும்

களம் பல களமும்
புலம் பல களமும்
தினம் தினம் காண்போம்

நாளொரு பொழுது நமக்கென புலர
திடமது கொண்டு அத்தனையும் வெல்வோம்

வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!



ஒருவன்....
இருளுக்கு நடுவில்
எப்படி உன்னால்
சிரிக்க முடிகிறது?

இன்னொருவன்....
உன் வாழ்வின்
ஒவ்வொரு சொட்டும்
வசீகரம் மிக்கது.

மற்றொருவன்....
இன்றும் போல
என்றும் இருந்தால்
எப்படி இருக்கும்?

நான்....
ஆற்று வெள்ளம்
அள்ளிப்போகும் கிளிஞ்சல்
வாழ்வு.

வாழ்வின் கோப்பையை
நிறைப்பது இரவு.

இரவின் கோப்பையை
நிறைப்பது நிலவு.

ஆனால்
அதிகாலை வேளைகளில்
நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை
நான் மட்டுமே
அறிகின்றேன்.

என்னிரு விழிகள் போதவில்லை
உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு

நான் கவிஞன் என்பதால்
என்னிடம்
வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை.
நீ ஏன் அழுகின்றாய் என்பதை
இந்த உலகிற்கு
சொல்லிப்போவதற்கு.



உந்தன் பேரழகு பார்த்த
பேதை மனம் பேசுது கேளடி..

கண்கள் உந்தன் கண்கள்
அது காந்தம் கலந்த அங்கமடி

எந்தன் இரும்பு நெஞ்சை இழுக்குதடி
நெருங்க மறுக்க வலிக்குதடி

மௌனம் உந்தன் மௌனம்
அது ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி

அத்தனையும் கவிதையாய் கொட்டுதடி
அதில் பொய்யே எனக்கு பிடித்ததடி

பேச்சு உந்தன் பேச்சு
சொற்கள் கேட்க சொக்குதடி

குயில்கள் கேட்டால் பாவமடி
உனைப்போல் பாட துடிக்குமடி
உந்தன் குரலில் பாடம் கற்குமடி

கூந்தல் உந்தன் கூந்தல்
அது இருளை வென்ற கருமையடி

என் இளமை ஒளியை தேடுதடி
என் இதயம் அதில்தான் தொலைந்ததடி

சிரிப்பு உந்தன் சிரிப்பு
இது ஒன்றே எனக்கு போதுமடி

என் பூமி சுற்ற மறுக்குதடி
பல பூகம்ப மாற்றங்கள் நிகழ்த்துதடி

அழகு உந்தன் அழகு
இந்த கவிஞனிடத்தில் வார்த்தையில்லை
அதை கவியாய் சொல்லிப்போவதற்கு

எந்தன் தமிழே எனக்கு போதவில்லை
உன்னை முழுதாய் சொல்லி முடிப்பதற்கு



உன் புன்னகை என்பது
என் பள்ளிப்பாடம் போன்றது.
இன்னும் படித்து முடிக்கவே இல்லை.

எத்தனை பக்கங்கள்
என்பது கூட
எனக்குத் தெரியாது.

பார்த்து எழுதித்தான்
பரீட்சையில் வென்றேன்.

இப்போதும்
பார்த்துத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
எழுதி வைத்த பக்கங்களுடன்
இன்னும் ஒன்றை சேர்த்துவிட..

தலை நரைத்த போதும்
முதுமை அழைத்த போதும்
இளமை இன்னும் இனிக்கிறதே!

உன் புன்னகை
இன்றும் இனிக்கிறதே!
அன்று போல்..

புரியாமல் விழிக்கின்றேன்
அதே பள்ளிப் பையனாய்

புரிந்ததை மட்டும் எழுதியே
கவிஞனாகி விட்டேன்.

இறக்க முன்னர்
முழுமையும் எழுதி முடித்தால்?
தமிழுக்கு இன்னுமொரு
காவியம் கொடுக்க முடியும்
என்னால்

என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து எழுதுகின்றேன்
உன் புன்னகையின் பக்கங்களை

இந்தக் காவியம்
இறக்கமுன் முடியுமா?
இல்லை
இறப்பிலே முடியுமா?



நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகளே
கால நீட்சியாய்
தொடர்கிறது.

பிரம்மனே காணமுடியாத
அடி நான்
முடி அவன்

ஈர்ப்பு என்பதை
அறிமுகம் செய்தது
நாங்கள் தான்

நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகள்

மணித்துளிகளாய் தொடங்கி
மணிக்கணக்காய் மாறி
யுகங்களாய் தொடர்கிறது.

ஒரு மாலைப் பொழுது..

அவனைப்பார்த்தபடி நானும்
என்னைப் பார்த்தபடி அவனும்

பொழுது இரவை அழைக்க
காற்று குளிரை நிறைக்க
மரங்கள் இலைகளை உதிர்க்க

அவன் என்னை
நெருங்கி வருவதாய்
உணர்ந்தேன்

நெற்றி வியர்த்திட
சத்தமிட்டுப் பல
முத்தங்கள் பொழிந்தான்
என் நிலவு காய்ந்த முற்றத்தில்.

குளிர்ந்து போய்
நானும் ஒரு
குட்டி நிலவாய் ஆனேன்.



விரைவு ரயிலே
விபத்து நிகழ்ந்ததடி
உன்னோடு

அழகுப் புயலே
என்னை
அடித்துப் போனாயடி
உன்னோடு

இளைய கொடியே
என்னை
வளைத்துப் போட்டாயடி
உன்னிடையில்

நான்
நெருப்பு மனிதன் என
நினைத்திருந்தேன்

ஒரு சிவப்பு ரோஜா தந்து
அந்த
நினைப்பை சிதைத்துவிட்டாய்
என்
நிலையை மாற்றிவிட்டாய்

மாற்றங்கள் கண்டேனடி
உன் வரவில்
என்னை மாற்றிக் கொண்டேனடி
உன் செயலில்
நானாக மாட்டிக் கொண்டேனடி
உன் நினைவில்

வெள்ளை ரோஜாவே
என் உள்ளம் உனக்காக
உயிரும் அதற்காக.....


ஏய் மழையே!
உன்னால் தான் உருவானேன்.
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்.
மறந்து விடதே!

என்னைப் பிரிந்திட
எப்படித் துணிந்தாய்?

என்னைப் பிரிகையில்
என்ன நீ நினைந்தாய்?

வானத்தின் மீது
உனக்கென்ன மோகம்?

மேகமாய் அலைவதில்
யாருக்கு லாபம்?

முகவரி தொலைக்கவா
முகிலாகிப் போனாய்?

என்னைப் பிரிகையில்
உன்னை நீ தொலைத்தாய்.

மண்ணை ரசிக்கவா
விண்ணில் மிதந்தாய்?

சில மனிதரைப் பார்த்தா
கண்ணீர் வடித்தாய்?

இல்லை
அவர் மனங்களை அறிந்தா
மரணிக்க நினைத்தாய்?

தற்கொலை
செய்யவா தரைமீது
விழுந்தாய்?

ஒன்று மட்டும் கேள்!

உன்னை ஏந்த பூமியிருக்கும் வரை
வற்றாக் குளங்களாய் வரலாறு மாறும் வரை
வயல்கள் வரம்புகளாய் மாறும்வரை
வறட்சி என்பது தொலையும் வரை
மரங்கள் சுவாசிக்க மறுக்கும் வரை
மலர்கள் மொட்டாகவே மடியும் வரை
அன்பு மனங்களே இல்லாது போகும் வரை

ஏன்
நதிகள் என்னைத் தொட்டுக்கொண்டிருக்கும் வரை
கானல் நீரிலும் ஈரம் காணும்வரை

இப்படி ஆயிரம்
மாறா மாற்றங்கள் நிகழும் வரை

நீ நினைத்தாலும்
உன்னால் மரணிக்க முடியாது.

தரையில் மோதி தலையை சிதைத்தாலும்
தவறுதலாய் கூட நீ சாகமாட்டாய்!

இது
மனிதர்களுக்கு கிடைக்காத வரமா?
இல்லை
நீ பெற்ற சாபமா?
எனக்கது புரியவில்லை

இருப்பினும்
உன் பிரிவு தற்காலிகம்
என்பதை மட்டும்
என்னால் உணரமுடிகிறது.

இருந்தும் ஏங்குகிறேன்
உன் பிரிவிற்காகவல்ல

நீ
என் மீது பொழியாது
அந்த மண் மீது பொழிந்த
முத்தங்களிற்காக

உவர்ப்பாய் இருக்கும் எனக்கு மட்டுமே
உன் முத்தத்தின்
இனிப்பு தித்திக்கும்.





பெண்ணவளே!
பேரழகே!
நான் தேடிய பூங்கொடியே!
கண்மணியே!
காரிகையே!
என் காதலியே!

தேவதையே!
தேன் நிலவே!
ஆடை கட்டும் பைங்கிளியே!

முழுமதியே!
முதல் மழையே!

வர்ணனைகள் எண்ணில் இல்லை.
வார்த்தைக்குள் நீ அடங்கவில்லை.

பார்வைகள் நிறையுதடி உன்னில்.
வாலிபம் தேடுதடி உன்னை.

தொலையுதடி! தொலையுதடி!
என் ஆயுள் உன்னில் தொலையுதடி.

அலையுதடி! அலையுதடி!
என் ஆவி உன் பின் அலையுதடி!

தோகை இளம் மயில் அழகே!
துள்ளும் கலை மானினமே!

போதுமடி! போதுமடி!
போதை தரும் உன் அழகு.

வாடுதடி! வாடுதடி!
வஞ்சம் இல்லா வாலிபம்.

தேடுதடி! தேடுதடி!
மஞ்சம் உந்தன் நெஞ்சமடி.

தூரமில்லை! தூரமில்லை!
வானமொரு தூரமில்லை.

நனையவில்லை! நனையவில்லை!
மழையிலும் நான் நனையவில்லை.

கோடையிலும் குளிருதடி!
வாடையிலும் வேர்க்குதடி!

தூங்கப்போனால் தூக்கமில்லை!
தூங்கிவிட்டால் கனவு தொல்லை!

என்னவளே! என்னவளே!
ஏக்கம் தந்த பெண் உருவே.

வந்து விடு! வந்து விடு!
தொல்லை தர என்னருகில் வந்து விடு.

இல்லை கொன்றுவிடு! கொன்றுவிடு!
குற்றுயிர் பிரித்தென்னைக் கொன்றுவிடு.







தமிழா!
காலமிது காலமிது
காத்திருந்த காலமிது.

வேளையிது வேளையிது
பொங்கு தமிழ் வேளையிது.

ஒன்றுபடு ஒன்றுபடு
ஓரணியில் ஒன்றுபடு.

கையிலெடு கையிலெடு
உன் கடனை கையிலெடு.

செய்து முடி செய்து முடி
செவ்வனே செய்து முடி.

வேரோடு விழுதுகள் சேர்கையிலே
வீறோடு நிமிரும் பெரு விருட்சம்.

நாடெல்லாம் நாம் நிமிர்ந்து எழுகையிலே
எங்கள் ஊரெல்லாம் விடிவது உறுதிபடும்.

பாரோடே போராடும் போர் நமது
இதை பகுத்தறிந்து நடத்தலே
முதல் கடன் உனது.

யாருமே கொடுக்காத அடி நமது
அதை கொடுத்திட சேர்த்திடும்
வளம் பெரிது.

இதை உணர்ந்து நீ நடப்பாய்
தமிழா!
உன் மனம் பெரிது.



மழை பொழியும் ஓர் நாளில்
மலர் சூடும் கல்லறைகள்
உமைப் பிரிந்த உறவெல்லாம்
உமைத்தேடி வந்திருக்கும்

உமைத்தேடி அழுதழுது
உம்முன்னே உயிர் துடிக்கும்
உமக்கென்று ஏதேதோ
கொண்டு வந்து சேர்த்திருக்கும்

மணம் நிறைத்த மலராலே
மாலைகளும் அவை சூடும்
மனம் நிறைந்த வேதனையால்
விழி நீரை அவை சிந்தும்

அண்ணன் உரை தொடர்கையிலே
அமைதியாக செவிமடுக்கும்
மணியோசை ஓய்ந்த பின்னே
மௌனமாக அஞ்சலிக்கும்

வேளை வந்து சேர்ந்தவுடன்
விளக்கொன்றை அவை ஏற்றும்
மழைத்துளிகள் வீழ்கையிலும்
சுடர் ஒளிரும் கல்லறை முன்

சுடர் ஒளியின் நடுவினிலே
முகம் தெரியும் இரவினிலே
முகம் காணும் விழிகள் எல்லாம்
குளமாகும் நீராலே

நீர் வழிந்த முகங்கள் எல்லாம்
உமை நினைந்தே சிவந்திருக்கும்
நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்
வந்து வந்து போயிருக்கும்

நீர் நிறைத்த நினைவுகளோ
நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்
நீர் சுமந்த கனவதுவோ
நிமிர்ந்து நட என்றிருக்கும்

உங்கள் பணி தொடர்ந்திடவே
உறுதியெடு என்றிருக்கும்
விடை பெறும் வேளையிலே
விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்
உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்
உம் பணி தொடர..



தாயே! என்று நான் வருவேன்?
உன் மடி தவழ..
அன்று கழிந்து தான் இறப்பேன்.
உன் மடியில் புதைய..
என்று தான் வருவேனோ?

உன் முலையில் பால் பருக..
அன்று தான் தொலையும்
என் துக்கம்.

அதன் பின்பு தான் தழுவும்
எனை தூக்கம்.

தாயே! தூக்கம் தொலைத்து
ரொம்ப நாளாச்சு.
ஏக்கம் நிறைந்து நெஞ்சு
பாழாய் போச்சு.

தாயே!
ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே
உயிர் பாதி போச்சு.

உனை விட்டு இங்கு வாழ்கையில்?
அந்த மீதிக்கும்
என்னவோ ஆச்சு.

நீ நலமாய் இருக்கையிலே
உள்ளம் கொஞ்சம் ஆறிச்சு.

இப்போ

உந்தன் துயர் கேட்கையிலே
கொடும் வெம்மையிலே வேகிற்று.

என்ன பாவம் நாம் செய்தோம்?
உன்னைப் பிரிந்து தவிக்க..

என்ன பிழை நீ செய்தாய்?
எம்மைத் தொலைத்துத் துடிக்க..

என்னைப் போல பல பேர்க்கு
உன்னைச் சேரத் துடிப்பு.

எந்தத்துயர் தொடர்ந்தாலும் நிற்காது
நம் பயணத் துடுப்பு.

ஊர் போகும் கனவோடே
என் நாட்கள் நகரும்.

உனை மீட்கும் போரில்
என் பங்கும் நிச்சயம் இருக்கும்.



ஓயாத அலையாக உழைத்தவனே!
பார் புகழும் சாதனைகள் படைத்தவனே!

வாழ்வை வரலாறாய் தந்தவனே!
வல்லமை எதுவென்று சொன்னவனே!

போரை வாழ்வாய் கொண்டவனே!
புலிவீரம் புதிதென்று சொன்னவனே!

பகை நடுங்க களம் செய்த புலிமகனே!
ஏன் இன்று தூங்குகின்றாய் எழு மகனே!

புயலாகி பகைவீடு செல்பவனே!
பகை புரியாத புதிராக வெல்பவனே!

பகைவருக்கு தலை வலியாய் வாழ்ந்தவனே!
தலைவருக்கு பலம் சேர்த்த தளபதியே!

தமிழருக்கு பயன் தரு வாய் நிமிர்ந்தவனே!
தரணியெங்கும் தமிழர் பலம் சொன்னவனே!

விடை பெறுவாய் என்று நாம் நினைக்கவில்லை!
வீர வேங்கை என்றும் மண்ணில் சாவதில்லை!

நெருப்பாய் பகையை எரித்தவனே!
என்றும் இருப்பாய் எம் நெஞ்சங்களில்!

வெடிகுண்டு தோற்றதையா உன்னை மண்ணில் வீழ்த்த!
விதி மீண்டும் வென்றதையா உன்னைச் சாவு கொல்ல!

ஊர் மீட்கும் கனவோடே
உன் நாட்கள் நகர,

உனை இழக்கும் நாள் ஒன்று
ஏன் எமக்கு புலர்ந்ததையா?

களமுனைகள் தேடுதையா உந்தனது கால்தடம்!
காற்றலைகள் தேடுதையா உந்தனது கட்டளை!

தோழமைகள் ஏங்குதையா உந்தன் முகம் காண!
காவலரண் காயுதையா உன்னை தினம் காண!


நீர் நிறைத்த நினைவுகளோ!
நெஞ்சில் வலி மூட்டுதையா!

நீர் சுமந்த கனவதுவோ!
நிமிர்ந்து நட என்குதையா!

உன் கனவை சுமந்தபடி!
பணி தொடர்வோம் உறுதி!

விடை பெறும் வீரனே!
வீர வணக்கங்கள் உந்தனுக்கு!



இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்



உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
என்றைக்கும் சொல்லமுடியவில்லை.

வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.

என ஒரு ஊமை புலம்புகின்றான்.

அவன் வரிகளில்….

ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன
மானிட உணர்வுகள்.

இன்னும் இன்னும்
வந்து விழுகின்றன.
குறையாய்ப் பிரசவிக்கும்
ஒரு மனிதனின் வரிகள்.

பேச முடியாததால்
தான் பூரணமடையாதவனாய்
புலம்புகின்றான்.

குறைபாடு உடையவனாய்
குற்றம் சுமத்துகின்றான்
தன்மீது.

ஆனால்…
அவன் உணர்வதையே
நானும் உணர்கின்றேன்.

அவன் சொல்வதையே
நானும் சொல்கின்றேன்.

அவனுள் நிறைந்து வழியும்
மானிட உணர்வுகளே
என்னுள்ளும் வந்து விழுகின்றன.
அவன் சுமப்பதையே
நானும் சுமக்கின்றேன்.

ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்.

இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்?

நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?

இல்லை
என்னைச்சுற்றியுள்ளவர்கள்
குறைபாடுடையவர்களா?
பூரணமடையாதவர்களா?
என

என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.

அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.

ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.



இருளை விரட்டிய சந்தோசத்தில்
உற்சாகமாய் இருந்தது
ஒரு காலைப்பொழுது

முல்லை நிலம் முற்றுகையிட
படையெடுத்துக் கொண்டிருந்தன
முகில்க்கூட்டங்கள்;

வட்டமடித்து வட்டமடித்து
புது மெட்டிசைத்துக்கொண்டிருந்தன
வானம் பாடிகள்

உதிர்வின் சலசலப்பிற்கே இடமில்லாமல்
கலகலப்பாய் காட்சியளித்தன
மலர்கள்

அமைதியாய் என்னை
வருடிக்கொண்டிருந்தது
இதமான காலை இளங்காற்று

என் இளமைக்கும்
இந்த இயற்கைக்கும்
ஏதோ இணைப்பு இருப்பதாய்
சிந்தித்துக் கொண்டிருந்தேன்

காலை வணக்கம்
காதில் ஒலித்தது

இந்தக் காளைக்கு
இதமான காலைப்பொழுதில்
செந்தமிழ் தேன்மொழியால்
காலை வணக்கம் சொன்ன
செந்தமிழ் தேன்மொழியாள்
யாராய் இருக்கும்

ஆவல் மேலிட
கண்களை திறந்து பார்த்தேன்

என்ன அதிசயம்
மின்னல் வெட்டி
மழை பொழிவதாய்
இன்னுமோர் இயற்கையை
கண் எதிரே கண்டேன்

இப்போது
மீண்டும் சிந்தித்தேன்

இந்த இயற்கைக்கும்
எனக்கும்
என்ன இணைப்பு என்று

அப்பொழுது
இதயம் பேசியது
உனக்காக பிறந்தவள்
என்று.



ஓரப்பார்வை வீசிப்போகும்
இளந்தென்றலே
என்ன சொல்ல வந்தாய்
என்னிடத்தில்

பூமி பார்த்துப்
புன்னகைத்துப் போறவளே
இந்தக் காளையைப் பார்த்து
காதல் சொல்ல வந்தாயா?

பட்டுத்தாவணி
தொட்டுக் கொள்ளும் பாதங்களே
அவளிற்கு ஒருமுறை
அனுமதி கொடுங்கள்
என்னைப் பார்ப்பதற்கு

யாரும் இல்லாத
பொழுது போகுமுன்னே
சொல்லிவிடு பெண்ணே
சொல்லவந்ததை

இல்லையேல்

என்னைத் தொலைத்தபடி நானும்
உன்னைத் தொலைத்தபடி நீயும்
இந்தப் பொழுதை மீண்டும் தேடி
தொலைக்கவேண்டும்
எம் நந்தவன நாட்களை



புதுமை புனைந்த
உன் புன்னகைக்கு
என் வாலிபம் விலைபோய்விட

அழகு நிறைந்த
உன் எடையின் நிறையானது
என் இதயம்.

வேல் விழிகள் தாக்கி
என் வயதை வதைத்திட

நீயே வேண்டும்
என நினைந்தது
என் மனம்.

அழகு தேவதை
அசையும் அசைவினில்
வாலிப ஆசைகள்
வந்து நிறைந்திட
நான் என்னையே மறந்தேன்.

என் இளமை
முழுமை பெறுவதாய்
நீ என் கண்களில்
தெரிந்தாய்.

என் உள்
இருந்து கொண்டே
வெளியில் உலவும் பெண்ணே
யாரடி நீ மோகினி?



என் எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின் ஓரத்தில்..

என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின் பயணத்தில்
அவளின் பக்கமாய்..

இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில் நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..

இன்னும் சிறிது நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச் சுமந்தபடி..

அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள் பயணம் தொடரும்..

அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்

எழுந்து சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின் வருகைக்காக..



புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது விடிகாலை.
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்வு.

எந்த நொடியும்
உடைந்து போகும்
நீர்க்குமிழிகளாய்
நான் காணும் மனிதர்கள்.

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Blog Archive

Followers

widgeo.net